ஈரானில் நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் முதல் போராட்டக்காரருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
எர்ஃபான் சொல்தானி – முதல் போராட்டக்காரருக்கு மரணதண்டனை?
26 வயதான எர்ஃபான் சொல்தானி கடந்த வாரம் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கராஜ் நகரில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டார். அவருக்கு உரிய நீதிமன்ற விசாரணை இன்றி, ஜனவரி 14-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நார்வேவைத் தலைமையிடமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் (Iran Human Rights – IHR) அமைப்பு தெரிவித்துள்ளது.
போராட்டங்களில் இதுவரை குறைந்தது 648 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இதில் 9 சிறுவர்கள் உட்படுகின்றனர். ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட பலமடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும், சில மதிப்பீடுகளின்படி அது 6,000-ஐ தாண்டியிருக்கலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால், இந்த தகவல்களை தனித்தனியாக உறுதிப்படுத்துவது மிகவும் கடினம் எனவும் கூறியுள்ளது. இதுவரை சுமார் 10,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் இயக்குநர் மக்மூத் அமிரி-மொகத்தம் பேசிய போது “ சமீப நாட்களில் இஸ்லாமிய குடியரசு பொதுமக்கள் மீது மேற்கொண்டுள்ள இந்த வன்முறை நடவடிக்கைகள், 1980களில் நிகழ்ந்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை நினைவுபடுத்துகிறது. இந்த பொதுமக்கள் படுகொலைகளில் இருந்து போராட்டக்காரர்களை காக்கும் பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது” என்று தெரிவித்தார்..
சர்வதேச அமைப்புகளின் கோரிக்கை
மற்றொரு மனித உரிமை அமைப்பான, தேசிய ஜனநாயக அமைப்பு கூட, சொல்தானியின் தூக்குத் தண்டனையை நிறுத்த சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட வேண்டும் என கோரியுள்ளது. “அவரது ஒரே குற்றம் – ஈரானுக்கு சுதந்திரம் வேண்டும் என்று குரல் கொடுத்தது மட்டுமே. அவரது குரலாக இருங்கள்” என்று NUFD தனது X பதிவில் கூறியுள்ளது.
எர்ஃபான் சொல்தானி யார்?
எர்ஃபான் சொல்தானி மீது “கடவுளுக்கு எதிராகப் போர் தொடுப்பது” என்ற கடும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது ஈரானில் மரணதண்டனைக்கு உரிய குற்றமாகும். அவருக்கு வழக்கறிஞரை அணுக அனுமதி மறுக்கப்பட்டதாகவும் NUFD கூறியுள்ளது. இணையத் தடை காரணமாக, அவரை உண்மையில் தூக்கிலிடப்பட்டாரா என்பது இன்னும் சுயமாக உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது.
போராட்டங்கள் – ஈரான் அரசின் பதில்
திங்கட்கிழமை ஈரான் அரசு நாடு முழுவதும் பெரிய ஆதரவு பேரணிகளை நடத்தி, போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டன என்று காட்ட முயன்றது. 1989 முதல் ஆட்சியில் இருக்கும், தற்போது 86 வயதான உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி இந்த அரசுக்கு ஆதரவான கூட்டங்களை அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என கூறினார்.
“இந்த பெருந்திரள் பேரணிகள் வெளிநாட்டு எதிரிகளின் திட்டங்களை தோற்கடித்துவிட்டன” என்று அவர் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
தெஹ்ரானின் என்கெலாப் (புரட்சி) சதுக்கத்தில், நாடாளுமன்றத் தலைவர் மொஹம்மது பகர் கலிபாஃப் பேசுகையில், ஈரான் தற்போது “நான்கு முனைப் போரை” எதிர்கொள்கிறது என்றார் –
பொருளாதாரப் போர், உளவியல் போர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் இராணுவப் போர், “தீவிரவாதிகளுக்கு எதிரான போர்” – இதன் மூலம் அவர் போராட்டங்களையே குறிப்பிட்டார்.
“இஸ்ரேலுக்கு மரணம்”, “அமெரிக்காவுக்கு மரணம்” என்ற கோஷங்களுக்கு நடுவில், ஈரானை தாக்கினால் டிரம்புக்கு “மறக்க முடியாத பாடம்” கற்பிப்போம் என்றும் அவர் எச்சரித்தார்.
டிரம்பின் பதில்
இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்களை ஈரான் அரசு கொல்வதாகக் கூறி, அதற்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கலாம் என்று மீண்டும் எச்சரித்தார். வெள்ளை மாளிகையின் உள்ளக விவாதங்களில், ஈரானுக்கு எதிராக சைபர் தாக்குதல் முதல் நேரடி அமெரிக்க அல்லது இஸ்ரேல் தாக்குதல் வரை பல விருப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், எர்ஃபான் சொல்தானியின் உயிர் தற்போது மிகப் பெரிய ஆபத்தில் இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறி, உலக நாடுகள் தலையிட்டு இந்த தூக்குத் தண்டனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
Read More : பற்றி எரியும் ஈரான்..! பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு..! அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்..!



