தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்ற தவெக தலைவர் விஜய், பதவியேற்பு விழா மேடையிலேயே மக்கள் நலன் சார்ந்த 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அதிரடி தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் முன்னிலையில் பதவியேற்ற விஜய், பின்னர் மேடையிலேயே முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
முதல் கைழுத்தாக தமிழக மக்களுக்கு மாதம் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான கோப்பில் விஜய் கையெழுத்திட்டார். இந்த அறிவிப்பு வெளியாகியவுடன் அரங்கில் இருந்த தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் சிறப்பு அதிரடி படை அமைக்கும் திட்டத்திற்கும் விஜய் ஒப்புதல் வழங்கினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் இந்த புதிய சிறப்பு படை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்பு கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.
பதவியேற்ற சில நிமிடங்களிலேயே மேடையிலேயே கோப்புகளில் கையெழுத்திட்ட விஜயின் இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. “முதல்வராக வந்தவுடன் அதிரடி ஆரம்பம்”, “வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கிய விஜய்” என சமூக வலைதளங்களில் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள விஜய் தலைமையிலான அரசு, முதல் நாளிலேயே மக்கள் கவனத்தை ஈர்க்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: BREAKING| “ச. ஜோசப் விஜய் என்னும் நான்..” முதலமைச்சரானார் விஜய்..! 9 அமைச்சர்களும் பதவி ஏற்பு..!



