பிரதமர் நரேந்திர மோடி இன்று 18வது ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி மூலம் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு 61,000 பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். தங்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களை மோடி பாராட்டினார்.
அப்போது பேசிய அவர் “இந்த முக்கியமான நாளில், நாட்டில் 61,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்கள். இன்று, உங்கள் அனைவருக்கும் அரசுப் பணிகளுக்கான நியமனக் கடிதங்கள் கிடைக்கின்றன. ஒரு வகையில், இது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு அழைப்புக் கடிதம், ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான ஒரு உறுதிமொழி,” என்று தெரிவித்தார்..
தங்கள் அரசாங்கம் அறிமுகப்படுத்திய விதிமுறைகளைப் பாராட்டிய அவர், பெண் காவலர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதை எடுத்துரைத்தார். “விநியோகிக்கப்பட உள்ள மொத்த நியமனக் கடிதங்களில், 49,200 கடிதங்கள் உள்துறை அமைச்சகம் மற்றும் துணை ராணுவப் படிகளுடன் தொடர்புடையவை. பெண் காவலர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுகிறார்கள்.
கடந்த 11 ஆண்டுகளில் எங்கள் அரசாங்கம் ஏராளமான சாதகமான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியதாலேயே இது சாத்தியமாகியுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படைப் பெண் வீரர்கள் எல்லையில் உள்ள பூஜ்ஜியக் கோட்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஜனவரி 26 அன்று, கடமைப் பாதையில், அனைத்து ஆண் சிஆர்பிஎஃப் படைப்பிரிவுகளுக்கும் ஒரு பெண் உதவி கமாண்டர் தலைமை தாங்குவார்,” என்று மோடி கூறினார்.
இந்தியா பல நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் பணியாற்றி வருவதாக மோடி எடுத்துரைத்தார். மேலும், உள்கட்டமைப்பில் நாடு ‘முன்னெப்போதும் இல்லாத’ முதலீடுகளைச் செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் “இன்று இந்தியா உலகின் இளம் நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவின் இளைஞர்களுக்காக நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சி. தற்போது, இந்திய அரசாங்கம் பல நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவின் இளைஞர்களுக்கு ஏராளமான புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருகின்றன. சமீப காலங்களில், இந்தியா நவீன உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத முதலீடுகளைச் செய்துள்ளது. இது கட்டுமானத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.
மேலும் “ ஜனவரி 24 ஆம் தேதி, ‘ஜன கண மன’ பாடல் நாட்டின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 76 ஆண்டுகள் நிறைவடைவதையும் குறிக்கிறது. இந்த நேரம் உங்களை அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான உங்கள் பொறுப்புகளுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு வருகிறது. ஜனவரி 24 அன்று, நமது அரசியலமைப்புச் சட்டம் ‘ஜன கண மன’ பாடத்தை தேசிய கீதமாகவும், ‘வந்தே மாதரம்’ பாடலை தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொண்டது. இந்த நியமனக் கடிதம், ஒரு வகையில், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு அழைப்புக் கடிதமாகும். இது ஒரு வளர்ந்த இந்தியாவை நோக்கிய திசையை வழங்குவதற்கான ஒரு ‘சங்கல்பப் பத்திரம்’ ஆகும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த வேலைவாய்ப்பு முகாம் நாடு முழுவதும் 45 வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். இந்த விண்ணப்பதாரர்கள் “உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை, உயர் கல்வித் துறை உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சேரவுள்ளனர்,” என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிப்பதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்த தொலைநோக்குப் பார்வையைச் செயலாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முன்முயற்சியே இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆகும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அது தெரிவித்தது.



