ராஜஸ்தானின் நாகூரில் ஒரு 58 வயது நபரின் வீட்டிலிருந்து 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டை பறிமுதல் செய்ததையடுத்து, அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
நாகூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) மிருதுல் கச்வா இதுகுறித்து பேசிய போது “ எங்களுக்கு கிடைத்த சில ரகசியத் தகவல்களின் அடிப்படையில், நாகூர் காவல்துறையின் ஒரு சிறப்புப் படை, ஞாயிற்றுக்கிழமை நாகூரின் தான்வ்லாவில் உள்ள குற்றவாளி சுலைமான் கானின் வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது, அங்கு பெருமளவிலான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று கூறினார்.
சுலைமான் 187 அட்டைப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 9 அட்டைப்பெட்டி டெட்டனேட்டர்கள், 15 கட்டு நீல நிற திரி வயர்கள், ஒன்பது கட்டு சிவப்பு நிற திரி வயர்கள் மற்றும் பல வெடிபொருட்களை தனது நிலத்தில் மறைத்து வைத்திருந்தார் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன..
“குற்றவாளி சுலைமான் கான் மீது நாகூரின் தான்வ்லா, படுகல்லன் மற்றும் அல்வாரின் சௌபாஸ்னி ஆகிய இடங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று வழக்குகளும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று கச்வா கூறினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை சுலைமானை கைது செய்து, வெடிபொருள் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. அவர் மீது ஏற்கனவே மூன்று 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரி இதுகுறித்து பேசிய போது “மேலோட்டமாகப் பார்க்கும்போது, சுலைமான் சுரங்க உரிமையாளர்களுக்கு வெடிபொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளார். இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட பெரும் அளவைக் கருத்தில் கொண்டு, அவர் ஏதேனும் பெரிய சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். அவரை விசாரிப்பதற்காக மத்திய அமைப்புகளையும் நாங்கள் தொடர்பு கொள்ளலாம்,” என்று தெஇவித்தார்..
அம்மோனியம் நைட்ரேட் இதற்கு முன்னர், நவம்பர் 2025-ல் டெல்லியின் செங்கோட்டைக்கு அருகே நடந்த வெடிப்பு உட்பட, பெரிய குண்டுவெடிப்பு வழக்குகளுடன் தொடர்புடையதாக இருந்துள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
டிசம்பர் 2 அன்று, சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய சட்டவிரோத வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட ஒரு பிக்கப் டிரக் நாதத்வாரா ஸ்ரீநாத்ஜியில் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனத்தைச் சோதனையிட்ட போது, ஒவ்வொரு பொட்டலமும் 2.78 கிலோ எடையுள்ள 83 ஐசிஎல் பிரைம் எக்ஸ் வெடிபொருட்கள் உட்பட பெருமளவிலான வெடிபொருட்களை காவல்துறை மீட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 981 தோட்டாக்கள் கொண்ட மொத்தம் 109 அட்டைப் பெட்டிகளும், ஒரு தனி அட்டைப் பெட்டியில் மொத்தம் 100 டிஎல்ஹெச்டி (டிரக் லைன் டெட்டனேட்டர்) மற்றும் டிடி ஃபியூஸ் பொருத்தப்பட்ட மேலும் 93 டெட்டனேட்டர்களும் அடங்கும். கூடுதலாக, சுமார் 30 அடி நீளமுள்ள ஒரு பாதுகாப்பு வெடிமருந்து திரி கண்டெடுக்கப்பட்டது. ஒரு நாள் கழித்து, டோங்க் மாவட்டத்தில் 2 பேரைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 150 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டையும் பறிமுதல் செய்தனர்.



