மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள சலமன்கா நகரில் ஒரு கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.. 12 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு கால்பந்து போட்டி முடிந்த உடனேயே இந்தத் தாக்குதல் நடந்தது. அப்போது, மர்ம நபர் ஒருவர் அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்தவர்களில் ஒருவர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சலமன்கா மேயர் சீசர் பிரிட்டோ வெளியிட்ட ஒரு அறிக்கையில், காயமடைந்தவர்களில் ஒரு பெண்ணும் ஒரு சிறுவனும் அடங்குவர் என்று கூறினார். இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்த பிரிட்டோ, இந்தச் சம்பவம் நகரவாசிகளை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார்.
பிராந்தியத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம்மிடம் உடனடி உதவியை அவர் கோரினார். அதிகாரிகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் குற்றக் குழுக்கள் வெற்றி பெறாது என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
இந்தத் தாக்குதல் நகரத்தில் நிலவும் குற்ற அலையின் ஒரு பகுதி என்று கூறிய பிரிட்டோ, வன்முறையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாமிடம் உதவி கோரினார். “துரதிர்ஷ்டவசமாக, சில குற்றக் குழுக்கள் அதிகாரிகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன, ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியாது,” என்று அவர் கூறினார்.
குவானாஜுவாடோ மாகாண வழக்கறிஞர் அலுவலகம், இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், அப்பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
குண்டர் கும்பல்களுக்கு இடையேயான வன்முறை
இதனிடையே , கடந்த ஆண்டு மெக்சிகோவில் அதிக எண்ணிக்கையிலான கொலைகள் நடந்த மாநிலம் குவானாஜுவாடோ என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் சாண்டா ரோசா டி லிமா கும்பலுக்கும் சக்திவாய்ந்த ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்லுக்கும் இடையே வன்முறை மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், மெக்சிகோ அரசாங்கத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் நாடு தழுவிய கொலை விகிதம் 100,000 பேருக்கு 17.5 கொலைகள் என்ற அளவில், 2016 ஆம் ஆண்டிலிருந்து மிகக் குறைவாக இருந்தது. இந்த புள்ளிவிவரங்கள் வன்முறையின் உண்மையான அளவை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.



