குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டுகளுக்கு நடுவே இருக்கும் இனிப்பான கிரீம், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தையும் தனக்குள் ஒளித்து வைத்துள்ளது. மாலை நேர தேநீருடனும், குழந்தைகளின் விருப்பமான சிற்றுண்டியாகவும் மாறிவிட்ட இந்த கிரீம் பிஸ்கட்டுகள், உண்மையில் உடலுக்குள் மெதுவான விஷமாக (Slow Poison) செயல்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிஸ்கட்டிற்குள் இருப்பது பாலில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான கிரீம் கிடையாது; அது வனஸ்பதி அல்லது டால்டா எனப்படும் கெட்ட கொழுப்புகள், சர்க்கரை பாகு மற்றும் செயற்கை நிறமூட்டிகள் கலந்த ஒரு ரசாயனக் கலவை என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டியது மிக அவசியமாகும்.
இந்த பிஸ்கட்டுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, இதய நோய்கள் வரும் அபாயம் பல மடங்கு கூடுகிறது. குறிப்பாக, இதிலுள்ள ‘டிரான்ஸ் ஃபேட்’ (Trans Fat) என்ற கொழுப்பு வகை, குழந்தைகளுக்கு தொப்பை போடுவது முதல் கல்லீரல் பாதிப்பு வரை பல சிக்கல்களைத் தருகிறது. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியைச் சீர்குலைப்பதுடன், அவர்களின் செரிமான மண்டலத்தையும் பாதிக்கிறது. மேலும், பிஸ்கட் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கச் சேர்க்கப்படும் ரசாயனங்கள், குழந்தைகளின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களை அதீத சுறுசுறுப்பு அல்லது மன அழுத்தத்திற்கு உள்ளாக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சர்க்கரை மற்றும் மைதாவால் செய்யப்படும் இந்த பிஸ்கட்டுகள் எளிதில் ஒருவரை அடிமையாக்கக் கூடியவை. இதனால் டீன் ஏஜ் பருவத்திலேயே உடல் பருமன், இன்சுலின் சுரப்பில் குறைபாடு மற்றும் தைராய்டு போன்ற ஹார்மோன் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சுவைக்காக சாப்பிடும் இந்த ஒரு பிஸ்கட், எதிர்காலத்தில் மிகப்பெரிய மருத்துவச் செலவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, மைதா மற்றும் ரசாயனங்கள் நிறைந்த இந்தச் சிற்றுண்டிகளை தவிர்த்து, சிறுதானிய பிஸ்கட்டுகள், கடலை மிட்டாய் அல்லது வீட்டில் செய்த ஓட்ஸ் குக்கீஸ்கள் போன்ற சத்தான உணவுகளைக் குழந்தைகளுக்குப் பழகப்படுத்துவதே சிறந்தது.



