மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (பிப்ரவரி 1) கடும் சரிவைச் சந்தித்துள்ளன. வழக்கமாக வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சந்தை இயங்காது என்றாலும், பட்ஜெட் அறிவிப்புகளை உடனுக்குடன் பிரதிபலிக்கும் வகையில் இன்று நடைபெற்ற சிறப்பு வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் பதற்றம் நிலவியது. இதன் விளைவாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் (Sensex) 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தொடங்கிய சில நிமிடங்களிலேயே சந்தை வீழ்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. 82,400 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமான சென்செக்ஸ், உரையின் நடுப்பகுதியில் 1,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 81,400 என்ற நிலைக்குக் கீழ் சென்றது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி (Nifty), 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 25,000 என்ற உளவியல் ரீதியான முக்கிய அளவைத் தக்கவைக்கப் போராடி வருகிறது



