ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, கல்லூரிப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர். ஆற்காட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் இன்று காலை கல்வி நிறுவனத்தை நோக்கிப் புறப்பட்டது. பேருந்து பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியை நெருங்கியபோது, எதிரே வந்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மின்னல் வேகத்தில் கல்லூரிப் பேருந்தின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், லாரி ஓட்டுநர் மற்றும் பேருந்திலிருந்த 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் ரத்த காயங்களுடன் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இது குறித்துத் தகவல் அறிந்த கொண்டபாளையம் காவல்துறையினர் விரைந்து வந்து, பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாக சோளிங்கர் – வாலாஜா சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்துக் கொண்டபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான சரியான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : இந்தியாவிலேயே பணக்கார மாநிலம் எது தெரியுமா..? எப்படி இதை கணக்கிடுகிறார்கள்..? சுவாரசியமான தகவல் இதோ..!!



