கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. பாலக்காடு நகருக்கு அருகே ஒரு வேனில் இருந்து வெடிப் பொருட்கள் நிரப்பப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெட்டிகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சரக்கு முற்றிலும் ரகசியமாக கொண்டு செல்லப்பட்டதால், இந்த மீட்பு நடவடிக்கை அப்பகுதி முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு மருத்துவக் கல்லூரிக்கு அருகே அந்த வாகனத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய பெட்டிகளையும், 20-க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் அடங்கிய பெட்டிகளையும் போலீசார் கண்டுபிடித்தனர். வெடிபொருட்கள் அடங்கிய பெட்டிகள் பெரிய தர்பூசணிப் பழ மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர்… நேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது..
வாகன ஓட்டுநர் கைது
அந்த வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையின் போது, அவர் கோவையில் இருந்து பெட்டிகளை ஏற்றி, திருச்சூரில் உள்ள ஒரு கல் குவாரிக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
மாநிலத்திற்குள் அதிக அளவு வெடிபொருட்கள் கொண்டு வரப்படுவதாக முன்னதாகவே தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது, அந்த பிக்கப் வேன் மறிக்கப்பட்டது. இருப்பினும், நிறுத்தும்படி அறிவுறுத்தியும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாததால், போலீசார் துரத்திச் சென்றனர். தற்போது வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல் குவாரிப் பணிகளுக்காக வெடிபொருட்கள்
கருங்கற்கள் குவாரிப் பணிகளில் பயன்படுத்துவதற்காக வெடிபொருட்கள் ரகசியமாக கொண்டு செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோன்ற வழக்குகள் கடந்த காலங்களிலும் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..



