தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே வாக்குறுதிப் போர் உச்சத்தை எட்டியுள்ளது. வாக்காளர்களை கவரும் வகையில் இரு தரப்பிலிருந்தும் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, மாணவர்கள் நீண்டகாலமாக சுமந்து வரும் கல்விக்கடன் சுமையை குறைக்கும் வகையில், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்துக் கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும்” என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தவிர, மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்றுள்ள கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்வதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். விளிம்புநிலை மக்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைத்து அதிமுக இந்த வியூகத்தை வகுத்துள்ளது. அதிமுகவின் இந்த அதிரடி அறிவிப்புகளுக்குப் போட்டியாக, ஆளுங்கட்சியான திமுகவும் தனது தரப்பிலிருந்து அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
ஏற்கனவே 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது கூட்டுறவுச் சங்கங்களில் நிலுவையில் உள்ள மற்ற நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்வதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கான தகுதியுள்ள பயனாளிகளின் விவரங்களை சேகரிக்க கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு உயர் மட்டத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
Read More : யூடியூப்பில் ஒரு கோடி வியூஸ் போனால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா..? பலருக்கும் தெரியாத டிப்ஸ்..!!



