திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் மற்றும் உட்கட்சி மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அக்கட்சியின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் வலம் வந்த நிலோபர் கபில், தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக் கூட்டங்களில் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது மற்றும் பெயரளவுக்கே அழைக்கப்படுவது போன்ற செயல்களால் மிகுந்த மனவேதனையில் உள்ள அவர், அதிமுகவுக்கு டாடா காட்டிவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டதாக உள்ளூர் அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.
அந்த வகையில், நிலோபர் கபிலின் அடுத்தகட்ட நகர்வு குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி ஜோலார்பேட்டை அருகே பொன்னேரியில் திமுகவின் பிரம்மாண்ட வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நிலோபர் கபில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி அதிமுக காய்களை நகர்த்தி வரும் வேளையில், முன்னாள் அமைச்சர்களே கட்சியை விட்டு வெளியேறுவது அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே பல முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ள சூழலில், நிலோபர் கபில் போன்ற சிறுபான்மையின செல்வாக்கு மிக்க தலைவர்கள் வெளியேறுவது, குறிப்பிட்ட தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Read More : தவெக நிர்வாகிகள் அதிரடி கைது..!! முக்கியப் புள்ளியை வலைவீசி தேடும் தனிப்படை..!! அதிர்ச்சியில் விஜய்..!!



