ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே, தனது 17 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்ய துணிந்த பெண்ணின் செயல், அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சித்தூரைச் சேர்ந்த கவிதாவிற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக ரகசியமாக நீடித்த இந்த விவகாரம், கவிதாவின் கணவர் விஜய்க்குத் தெரியவரவே அவர் மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிதா, தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவன் மற்றும் மாமியாரை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு கொடூரத் திட்டம் தீட்டியுள்ளார்.
சம்பவத்தன்று கவிதாவின் மாமியார் நிர்மலா மட்டும் வீட்டில் இருப்பதை பயன்படுத்திக் கொண்ட அந்தச் சிறுவன், கத்தி மற்றும் மிளகாய்ப் பொடியுடன் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். நிர்மலாவின் கண்களில் காரத்தை தூவி, அவர் நிலைகுலைந்த சமயம் பார்த்து கழுத்தை அறுக்க முயன்றுள்ளான். நிர்மலாவின் மரண ஓலம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, நிலைமை விபரீதமாவதை உணர்ந்த சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
கழுத்தில் பலத்த காயமடைந்த நிர்மலா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனைப் பிடித்துச் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் இருந்த கவிதாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



