மத்தியப் பிரதேச மாநிலம் தேவ்ரி நகரில் கடந்த 6 மாதங்களாக மர்மமாக நீடித்த இளைஞனின் மரண வழக்கு, தற்போது ஒரு கழிவுநீர் தொட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞரான பிரின்ஸ் பால்மிகி, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அவரது நண்பர் சோயிப் என்பவரால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த கொடூர கொலைக்கு கள்ளக்காதலே முக்கியக் காரணமாக இருந்துள்ளது. பிரின்ஸின் மனைவி துளசிக்கும், சோயிப்புக்கும் இடையே திருமணத்திற்கு முன்பிருந்தே நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது. திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் மனைவியின் நடத்தையில் பிரின்ஸுக்கு சந்தேகம் ஏற்பட, குடும்பத்தில் சண்டைகள் வெடித்துள்ளன. தன் காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்டத் துளசியும் சோயிப்பும் இணைந்து திட்டம் போட்டுள்ளனர்.
பிரின்ஸுடன் நண்பராக பழகத் தொடங்கிய சோயிப், அவருக்கு ‘ஸ்மாக்’ எனும் போதைப்பொருளைப் பழக்கப்படுத்தி, அவர் போதையில் இருக்கும் நேரங்களில் துளசியை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் தங்களின் ரகசிய உறவு வெளியே தெரிந்தவுடன், பிரின்ஸை கொலை செய்ய சோயிப் முடிவு செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி, பிரின்ஸுக்கு அதிக அளவு போதை மருந்தை கொடுத்து மயக்கமடைய செய்த சோயிப், அவரைப் படுகொலை செய்து தனது வீட்டின் பின்புறமிருந்த கழிவுநீர் தொட்டிக்குள் வீசியுள்ளார். சடலம் அழுகும் நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க குப்பைகளைக் கொட்டியதுடன், உடல் விரைவில் சிதைந்து அடையாளம் தெரியாமல் போவதற்காக அதன் மீது தொடர்ந்து உப்பைக் கொட்டி வந்துள்ளார்.
கொலைக்கு பிறகு சோயிப்பும் துளசியும் குஜராத் மாநிலத்திற்கு தப்பிச் சென்று கணவன்-மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை கண்ட பிரின்ஸின் குடும்பத்தினர், உடனடியாக போலீஸாரிடம் ஆதாரங்களை ஒப்படைத்தனர். இதன் அடிப்படையில் சோயிப்பை பிடித்து விசாரித்தபோது, அவர் கொலையை ஒப்புக்கொண்டதுடன் எலும்புகள் மறைக்கப்பட்ட இடத்தையும் அடையாளம் காட்டினார். அங்கிருந்து பிரின்ஸின் மண்டை ஓடு மற்றும் எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது சோயிப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சதியில் மனைவியின் நேரடிப் பங்களிப்பு எந்தளவு என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



