உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்குள் வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு தற்காலிகமாக 10% சுங்கவரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார். சமீபத்தில் உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்த வரி விதிப்புகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பதிவில், “ வெள்ளை மாளிகையில் இருந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் 10% சுங்கவரி விதிக்கும் ஆணையில் கையெழுத்திட்டது எனக்கு மிகப் பெரிய பெருமை. இது மிக விரைவில் அமலுக்கு வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.. இந்த புதிய 10% சுங்கவரி மொத்தம் 150 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இந்த முடிவு
1977 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் International Emergency Economic Powers Act (IEEPA) சட்டத்தின் கீழ் முன்பு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் சமீபத்தில் செல்லாதவை என அறிவித்தது. அந்த வரிகள் 10% முதல் 50% வரை இருந்தன. அந்த தீர்ப்புக்குப் பிறகே, மாற்று சட்ட அடிப்படையில் புதிய வரி விதிப்பை ட்ரம்ப் கொண்டு வந்துள்ளார்.
மேலும் அதிக சுங்க வரிகள் விதிக்க வாய்ப்பு
மேலும், 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301 கீழ், குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணைகள் தொடங்கப்படுவதாகவும் டிரம்ப் உறுதி செய்தார்.
“மற்ற நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் அநியாய வர்த்தக நடைமுறைகளிலிருந்து எங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள்,” என்று அவர் கூறினார்.
மேலும் அதிக சுங்க வரிகள் விதிக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். “எங்களிடம் பல மாற்றுவழிகள் உள்ளன. அதிக வருமானம் கிடைக்கலாம். அதனால் நாங்கள் மேலும் வலிமையானவர்களாக மாறுவோம்,” என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் , 1974 வர்த்தகச் சட்டத்தின் Section 122 பிரிவை பயன்படுத்தியே இந்த புதிய சுங்க வரிகள் விதிக்கப்படுவதாக கூறினார். இந்த அரிதாக பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவு, நாட்டின் செலவுக் கணக்கு)சிக்கலை சமாளிக்க, அதிபருக்கு அதிகபட்சம் 15% வரை சுங்கவரி விதிக்க 150 நாட்கள் அனுமதி அளிக்கிறது. இதற்காக நீண்ட விசாரணை தேவையில்லை.
நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் விளக்கம்
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசெண்ட் கூறுகையில், இந்த 10% சுங்கவரி மற்றும் பிற வர்த்தகச் சட்டங்களின் கீழ் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் மூலம், 2026 ஆம் ஆண்டில் கிடைக்கும் சுங்க வருவாய் பெரும்பாலும் மாற்றமின்றி இருக்கும் என்றார். தேவைஎனில் அரசு பின்வரும் சட்டங்களை பயன்படுத்தும் என்றும் கூறினார்:
“நாடுகளுக்கான மொத்த சுங்கவரி அளவு அதே நிலைக்கு மீண்டும் வரும். ஆனால் அது நேரடியாக இல்லாமல், சற்று சிக்கலான முறையில் அமல்படுத்தப்படும்,” என்று பெசென்ட் விளக்கினார்.
சட்ட சவால்கள் ஏற்படலாம்
உச்சநீதிமன்ற தீர்ப்பால் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் டிரம்பின் அழுத்தம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த புதிய சுங்க வரிகளும் நீதிமன்ற சவால்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பிரிவு 122 சட்டத்தின் படி, காங்கிரஸ் அனுமதி இல்லாமல் 150 நாட்களுக்கு மேல் இந்த வரிகள் நீடிக்க முடியாது. அதனால் நீதிமன்றங்கள் இறுதி தீர்ப்பு வழங்குவதற்குள், இந்த சுங்க வரிகள் காலாவதியாகிவிடும் வாய்ப்பும் உள்ளது.



