தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் காய்நகர்த்தல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அந்த வகையில், நாமக்கல்லில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி ஆகியோர் திடீரென ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து முதற்கட்டமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. மார்ச் மாதத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு 3 முறை அரசு மற்றும் கட்சி ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மதுரை, வேலூர் மற்றும் திருச்சி ஆகிய முக்கிய நகரங்களில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பிரதமர் உரையாற்ற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை எல். முருகன் முன்னின்று கவனித்து வருகிறார். பிரதமரின் இந்தப் பயணமானது கூட்டணி பலத்தை நிரூபிக்கும் ஒரு மேடையாக அமைய வேண்டும் என்பதால், அதிமுகவின் முக்கியத் தூணாக கருதப்படும் தங்கமணியுடன் ஒருங்கிணைப்பு குறித்து எல். முருகன் விவாதித்ததாக கூறப்படுகிறது.



