சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. திமுக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும், அதிக தொகுதிகளை வழங்காத பட்சத்தில் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது..
குறிப்பாக காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. இதனால் திமுக – காங்கிரஸ் இடையேயான மோதல் மேலும் முற்றியது.. எனினும், சமீபத்தில் சென்னை வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்..
ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.. மேலும் திமுகவும், காங்கிரஸும் இணைந்து தான் தேர்தலை சந்திக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.. மேலும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தற்போது எழவே இல்லை.. அது சரிவராது என்பது எங்களுக்கும் தெரியும் காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும் எனவும் தெரிவித்தார்.. முதல்வரின் இந்த கருத்தால் திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது..
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், தவெக காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.. மேலும் “ தவெக வெளிப்படையாகவே காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.. அவர்கள் எங்களுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறார்கள்.. இதன் மூலம் எங்கள் கட்சி அடிமட்ட அளவில் வலுப்பெற்று இருப்பது வெளிப்படுகிறது.. விஜய் உடன் பேசுவதை மறுக்கவில்லை..” என்று தெரிவித்தார்..
திமுகவிடம் இருந்து நேர்மறை பதில் எதுவும் இதுவரை வரவில்லை என்பதால் அக்கட்சி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. ஒரு புறம் திமுக, மறுபுறம் தவெக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுக்கிறது.. கேரள தேர்தலை குறிவைத்து விஜய் உடன் கூட்டணி வைக்கவும் காங்கிரஸில் ஒருதரப்பு விரும்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. டெல்லியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது..
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடலாம் என கூறப்படுகிறது. விஜய், காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வழங்கவும் 5 முதல் 6 அமைச்சரவை பதவிகள் அளிக்கவும் தயாராக இருப்பதாகவும், 100 தொகுதிகள் வரை வழங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி மார்ச் 5ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன… அப்போது ராகுல் – விஜய் சந்திப்பு நடக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
என்றாலும், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தங்களுடன் தான் கூட்டணி அமைக்கும் என்று தவெக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்..
திமுகவை பொறுத்தவரை, ஏற்கனவே ஆட்சியில் பங்கு எல்லாம் கிடையாது என்று ராகுலிடம் கனிமொழி தெளிவாக கூறிவிட்டாராம்.. மேலும் கூட்டணியில் புதிய கட்சிகள் வந்துவிட்டால் அதிக தொகுதிகள் எல்லாம் தர முடியாது, 25 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது..
எனினும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெளியேறினாலும் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் என்ற தலைவலியை கழற்றி விடுவதே நல்லது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. ஒருவேளை தவெக உடன் காங்கிரஸ் இணைந்தால் அது திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? தேர்தல் களத்தில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
Read More : “ தவெகவினர் இனி எந்த ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது..” புஸ்ஸி ஆனந்த் போட்ட உத்தரவு..! இதுதான் காரணமா?



