தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில், குடும்பக் கௌரவத்தை காப்பதாக கூறிப் பெற்ற அக்காவையே தம்பி வெட்டிக்கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்துங்கநல்லூர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா (35), கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுமித்ராவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவரது தம்பி முத்துராஜா (27), அக்காவை கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. அக்காவின் செயல்பாடுகளால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுவதாக கருதிய முத்துராஜா, அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.
திட்டமிட்டபடி, நேற்று இரவு தனது நண்பர் வசந்த் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சுமித்ராவின் வீட்டிற்கு முத்துராஜா சென்றுள்ளார். நண்பரை வாசலில் காவலுக்கு நிற்க வைத்துவிட்டு, உள்ளே சென்ற முத்துராஜா தனது அக்காவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுமித்ராவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுமித்ரா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த செய்துங்கநல்லூர் போலீசார், உயிரிழந்த சுமித்ராவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய முத்துராஜா மற்றும் அவரது நண்பர் வசந்த் ஆகிய இருவரையும் சில மணி நேரங்களிலேயே போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், “குடும்ப மானத்தை காக்கவே அக்காவை கொன்றேன்” என முத்துராஜா வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



