துபாய் நகரில் வசிக்கும் மக்களுக்கு இன்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. “ஏவுகணை தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்று எச்சரிக்கும் அவசர அறிவிப்பு நகரம் முழுவதும் பலரின் மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்டது.
இந்த எச்சரிக்கை, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் அறிவிக்கப்பட்டது.. கடந்த சனிக்கிழமை இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் அமெரிக்கா இராணுவ தளங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் உள்ள வளைகுடா நாடுகளில் பதிலடி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியிட்ட அவசர அறிவிப்பில், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கவும், எந்தவொரு ஆபத்துக்கும் எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் திறந்த வெளி பகுதிகளைத் தவிர்க்கவும், தேவையானால் உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அந்த அறிவிப்பில், “தற்போதைய சூழ்நிலை காரணமாக ஏவுகணை தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் உடனடியாக தஞ்சம் புகுங்கள். ஜன்னல்கள், கதவுகள் மற்றும் திறந்த வெளி பகுதிகளிலிருந்து விலகி இருங்கள்” என்று கூறப்பட்டது. இந்த திடீர் எச்சரிக்கை காரணமாக பலர் பதற்றமடைந்து அதிகாரப்பூர்வ தகவல்களைத் தேடி பார்க்க தொடங்கினர்.
இந்நிலையில் துபாய் போலீஸ், மக்கள் அமைதியாக இருக்கவும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது. இத்தகைய சூழ்நிலையில் தவறான தகவல்கள் பரவினால் தேவையற்ற பயமும் பதற்றமும் உருவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தகவலை பகிர்வது ஒரு பொறுப்பு. சரிபார்க்கப்படாத செய்திகளை பரப்புவது சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கி பாதுகாப்பை பாதிக்கலாம். உங்கள் பாதுகாப்புக்காக அதிகாரப்பூர்வ தகவல்களையே நம்புங்கள்” என்று துபாய் போலீஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டணிக்கு இடையேயான போர் தற்போது 7-வது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலில் குறையவேண்டிய எந்த அறிகுறியும் இதுவரை தெரியவில்லை.
இந்த போரில் கடந்த 6 நாட்களில் ஈரான் நாட்டில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லெபனான் நாட்டில் 70க்கும் மேற்பட்டோர், இஸ்ரேல் நாட்டில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து தற்போது மத்திய கிழக்கு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள 14க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது.
இதனிடையே குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குவைத் மீது ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்களுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரானில் போர் தீவிரமடைந்த நிலையில் முழுமையாக செயல்பாட்டை நிறுத்திய இரண்டாவது அமெரிக்க தூதரகம் இதுவாகும்.
Read More : கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்.. மத்திய அரசு அதிரடி உத்தரவு.. உடனடி அமல்..!



