பெற்றோரின் அரவணைப்பில்தான் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையையே சிதைக்கும் வகையில், ஹைதராபாத்தில் நடந்த இந்தச் சோகச் சம்பவம் பலரது மனதையும் உலுக்கியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பைராமுல்குடா ஏரி அருகே, லோகசானி ராஜேஸ்வரி (34) என்ற பெண் தனது 9 மாத மகள் அனுராதாவை நீரில் மூழ்கடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணை காவலில் எடுத்தனர்.
சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் இருந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணையில், சம்பவத்தின் போது பெண் மதுபோதையில் இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பின்னால் குடும்பப் பிரச்சினையா, மன உளைச்சலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தாயின் கைகளிலேயே பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முழுமையாக நிறைவடைந்த பிறகே இந்த வழக்கின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also Read: உங்க குழந்தைங்க படிப்பில் கவனம் செலுத்தவில்லையா?… இதற்கு காரணம் இந்த 5 பழக்கங்கள் தான்!



