கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ 3-வது முறையாக விஜய்க்கு சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த 15-ம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.. அன்றைய தினமும் அவரிடம் சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது..
இந்த நிலையில் ஜனநாயகன் ஷூட்டிங்கிற்காக கரூர் கூட்டம் பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.. புகைப்பட ஆதாரங்களுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிபிஐ விசாரணையில் தவெக தலைவர் விஜய்யிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி, நாமக்கல், கரூர், கூட்டம் ஜனநாயகன் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டதா? என்று விஜய்யிடம் சிபிஐ கேள்வி எழுப்பியதாக தெரிகிறது..
நாமக்கல், கரூர் பிரச்சார கூட்டத்தை சினிமா ஷூட்டிங் கேமரா மூலம் பதிவு செய்தது யார்? நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் என புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தது தெரியுமா..? காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் என அறிவித்துவிட்டு 8 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது ஏன்? என சிபிஐ அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் பிரச்சாரத்தை நிறைவு செய்ததாக விஜய் சிபிஐயிடம் பதிலளித்ததாக கூறப்படுகிறது. மேலும் சிபிஐ அதிகாரிகளின் பல கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என்று தவெக தலைவர் விஜய் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. கூட்டங்களில் சினிமா ஷூட்டிங் கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தை காட்டி விஜய்யிடம் சிபிஐ விசாரணை செய்ததாகவும் கூறப்படுகிறது.. ஷூட்டிங் கேமராக்களை பயன்படுத்தியது தொடர்பாக ஜனநாயகன் படக்குழுவை விசாரிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



