குஜராத் மாநிலம் சூரத் நகரில் லிம்பாயத் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் மற்றும் 4 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேத்தி காலனியில் உள்ள இரு மாடி குடியிருப்பு வீட்டில் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த வீடு புடவை வேலைகள் மற்றும் பொருட்கள் சேமிப்பிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. காலை சுமார் 11 மணியளவில் மின் சுவிட்ச் போர்டில் இருந்து ஏற்பட்ட தீப்பொறிகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த புடவைகள் மற்றும் ஃபோம் தாள்கள் தீப்பற்றியதால், நச்சுப் புகை சில நிமிடங்களிலேயே வீடு முழுவதும் பரவியது. இதனால் உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் புகை வெளியேறுவதை கண்டு உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்திய பின்னர், உள்ளே இருந்தவர்களை மீட்டனர்.
ஆனால் அவர்கள் சுயநினைவின்றி இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவர்கள் பரிசோதித்தபோது, நச்சுப் புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் 5 பேரும் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதி முழுவதும் துயரம் நிலவுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: தவெக பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் வீசியது யார்..? என்ன நடந்தது..? – போலீசார் விளக்கம்!



