கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வீட்டில் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
செவாயூர் குரிக்கத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், உரிய அனுமதி பெறாமல் சிலர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று இரவு திடீரென அங்குள்ள வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். இந்த விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த ராகுல் (26) மற்றும் அவரது மைத்துனரான மற்றொரு ராகுல் (27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த விஷ்ணு (28), அவரது மனைவி சினி (27) மற்றும் ஹிஜித் (36) ஆகிய மூவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்புப் பகுதியில் எவ்வித பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல், ரகசியமாகப் பட்டாசு தயாரித்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: JOB: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை.. ரூ. 20,000 சம்பளம்..! நேர்காணல் மட்டும்தான்!



