அடுத்த 100 நாளில் ஜி.கே.வாசன் அறிவுறுத்தலின் பேரில் வளமான கூட்டணி அமையும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு பாஜகவும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதே போல பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் இன்று அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை நேற்று சந்தித்துப் பேசினார். இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ”மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும். பிரதமர் மோடியை வேட்பாளராக கொண்ட பாஜகவில் அங்கம் வகிக்க தமாகா முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜி கே வாசனை தமாகா அலுவலகத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எல்லா தரப்பட்ட வகுப்பினரும் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான் பிரதமர் மோடியின் நோக்கம். 2024 – 2029 என்பது மிக முக்கியமான காலகட்டம். அடுத்த 100 நாட்களில் ஜி.கே.வாசனின் அறிவுறுத்தலின்பேரில் ஒரு வளமான தமிழ் கூட்டணியை உருவாக்குவோம். அதன் மூலம், ஜி.கே.மூப்பனாரின் கனவு தமிழக மண்ணிலே நடந்தே தீரும் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.
Read More : Holiday | செம குட் நியூஸ்..!! மக்களே சொந்த ஊருக்கு போக ரெடியா..? மார்ச் மாதம் 11 நாட்கள் விடுமுறை..!!
பிரதமர் மோடிக்கும் ஜி.கே.வாசனுக்கு இருக்கக்கூடிய நட்பு என்பது தனிப்பட்ட முறையில் ஒரு பந்தம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆழமானது. ஜி.கே.வாசன் அவரது மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதற்கான முயற்சியை முழு மனதுடன் எடுத்துள்ளார். எல்லோருக்குமான எல்லோரோடும் சேர்ந்து வளமான இந்தியாவை வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் நோக்கம். எதிர்க்கட்சியினர் வைக்கக்கூடிய எல்லா பொய் குற்றச்சாட்டுகளும் வருகின்ற காலத்தில் காணாமல் போகும்” என்று தெரிவித்தார்.