இதய அறுவை சிகிச்சை துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பிரபல மருத்துவர் டாக்டர் ஜெர்மி லண்டன், தாம் 1500 நாட்களுக்கும் மேலாக மது அருந்தாமல் வாழ்ந்த பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளன.
மது ஆரோக்கியத்தை பாழாக்குகிறது: ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்ட காணொளியில் பேசிய அவர், மது பழக்கத்தை முழுமையாக நிறுத்திய பிறகு தன்னுடைய உடல், மனநிலை மற்றும் தினசரி வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை விளக்கினார். “நான் ஆரோக்கியமாக இருக்க இவ்வளவு முயற்சி செய்து கொண்டு, அதே சமயம் உடலுக்கு நச்சாக இருக்கும் மதுவை சேர்ப்பது எந்த வகையிலும் பொருத்தமில்லை” என அவர் குறிப்பிட்டார்.
மன தெளிவு அதிகரிப்பு: மது அருந்துவதை நிறுத்தியதிலிருந்து, காலை நேர மந்தநிலை, சிந்தனை குழப்பம் போன்றவை முற்றிலும் குறைந்ததாக அவர் கூறினார். தினமும் முழு கவனத்துடன் பணியாற்ற முடிவதாகவும், முடிவெடுக்கும் திறன் மேம்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலைத்த வாழ்க்கை முறை: மது இல்லாத வாழ்க்கை தன்னுடைய தினசரி பழக்கத்தை மிகவும் ஒழுங்காக மாற்றியதாக அவர் கூறுகிறார். “நம்பகமான தினசரி பழக்கம் உருவாகும்போது, நீங்கள் உங்களைத் தானே நம்பத் தொடங்குகிறீர்கள்” என அவர் வலியுறுத்தினார்.
உணர்ச்சி நிலைத்தன்மை: முன்பு இருந்த மனநிலை ஏற்றத் தாழ்வுகள் குறைந்து, தற்போது உணர்ச்சி ரீதியாக அதிக நிலைத்தன்மை கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தனிப்பட்ட உறவுகளும், தகவல் பரிமாற்றமும் மேம்பட்டுள்ளதாக கூறினார்.
மது பழக்கத்தை விட்டதன் மூலம் தன்னுடைய வாழ்க்கை முழுமையாக மாற்றமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மனிதர்கள் வாழ்க்கையின் உணர்ச்சிகளை முழுமையாக அனுபவிக்க வேண்டும்; அதை மழுங்கடிக்கக்கூடாது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மது அருந்துவது என்பது தனிப்பட்ட தேர்வு என்றாலும், அதைத் தவிர்ப்பது அவரது வாழ்க்கையில் எடுத்த மிக முக்கியமான முடிவாக இருந்ததாகவும், இதே மாற்றத்தை மற்றவர்களும் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Read more: 4 பேர் பலி.. 10 பேர் மாயம்..! புயலில் கவிழ்ந்த சுற்றுலா படகு.. மீட்பு பணிகள் தீவிரம்..!



