தமிழ் சினிமாவில் பல காதல் கதைகள் திரையில் மட்டுமே நிறைவடையும் நிலையில், சில காதல்கள் மட்டும் நிஜ வாழ்க்கையிலும் மலர்ந்து ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட அழகான காதல்களில் ஒன்று தான் நடிகர் அஜித் ஷாலினியின் காதல்.. இந்த காதலின் தொடக்கம் 1999-ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ படப்பிடிப்பில்தான்.
‘அமர்க்களம்’ படப்பிடிப்பு தொடங்கியபோது இருவரும் தொழில்முறை நடிகர்களாக மட்டுமே ஒருவரை ஒருவர் சந்தித்தனர். ஆனால், படப்பிடிப்பு நாட்கள் நகர்ந்தபோது அந்த உறவு மெதுவாக நட்பு ஆகவும், பின்னர் உணர்ச்சி பிணைப்பாகவும் மாறியது. ஒரு காட்சியில் நடித்தபோது, அஜித்தின் கையில் இருந்த கத்தி தவறுதலாக ஷாலினியின் கையை கீறியதாக கூறப்படுகிறது. அந்த நொடியில் அஜித் மிகவும் பதற்றமடைந்து உடனடியாக முதலுதவி செய்ததோடு, முழு நாளும் அவரது உடல்நலத்தை கவனித்தார். அந்த அக்கறை தான் இருவருக்கிடையே ஒரு தனி நெருக்கத்தை உருவாக்கியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அஜித் ஷாலினியிடம் ப்ரபோஸ் செய்தது தான்.. இயக்குனர் சரண் இந்த தகவலை தனது பேட்டியில் பகிர்ந்தார். அவர் கூறுகையில், சேர்ல நான் உட்கார்ந்து இருந்த போது என் வலது பக்கம் அஜித்தும், இடது பக்கம் ஷாலினியும் இருந்தாங்க. அப்ப அஜித் என்கிட்ட, ‘சரண்ஜி உங்களுக்கு மாசத்துல பத்து பத்து நாள்களாக கால்ஷீட் கொடுக்காமல், மொத்தமாக கால்ஷீட் கொடுத்துடுறேன். ஷூட்டிங் ரொம்ப நாள் இழுத்துக்கிட்டே போனால், இந்த பொண்ணை நான் லவ் பண்ணிடுவேனோனு எனக்கு பயமா இருக்குது’னு சொன்னார்.
கிட்டத்தட்ட அவரது லவ் புரொபோசல் போல இருந்தது. இதைக் கேட்டதும் ஷாலினி முகமெல்லாம் சிவந்திடுச்சு என்றார். படப்பிடிப்பு முழுவதும் இருவரும் தங்களது தொழில்முறை ஒழுக்கத்தை கடைபிடித்தனர். ஆனால், அவர்களின் பார்வைகள், அமைதியான கவனிப்பு மற்றும் சிறிய அக்கறைகள் மூலம் உணர்வுகள் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது அதேபோல், படப்பிடிப்பு இடைவெளிகளில் அவர்கள் பகிர்ந்த சிறிய உரையாடல்கள், இசை கேட்கும் தருணங்கள், மற்றும் அமைதியான நேரங்கள் கூட அந்த உறவை மெதுவாக வளர்த்ததாக கூறப்படுகிறது.
அமர்களம் படம் ஷூட்டிங் முடிந்த பிறகு இருவரும் 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. இருந்தாலும் இவர்கள் ஜோடியாக நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படம் இன்றும் ரசிகர்களுக்கு பிடித்தமான படங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு திரைப்படத்தில் தொடங்கிய இந்த பயணம், இன்று உண்மையான வாழ்க்கையில் நிலைத்த காதலாக மாறி, தமிழ் சினிமாவின் அழகான காதல் கதைகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
Read more: இந்த பேமெண்ட்களுக்கு UPI PIN தேவையில்லை..! முன்னணி வங்கியின் முக்கிய மாற்றங்கள்..!



