டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிகாலை சுமார் 4 மணியளவில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நிமிடங்களில் தீ வேகமாக பரவி, மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளையும் சூழ்ந்தது. தகவல் கிடைத்தவுடன் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
மீட்பு நடவடிக்கைகளில், கட்டிடத்தில் சிக்கியிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, காலை 6 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், கட்டிடத்தின் பல பகுதிகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து ஷாஹ்தாரா துணை ஆணையர் ராஜேந்திர பிரசாத் மீனா கூறுகையில், “அதிகாலை தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக தீயணைப்பு படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். தீயை அணைக்க இரண்டு மணி நேரம் பிடித்தது. அதன் பின்னர் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார்.
இதுவரை மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. எனினும், ஏசி வெடித்ததாலே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Read more: உங்கள் வீட்டில் துளசி செடியை எங்கே வைக்க வேண்டும்? இந்த திசையில் வைத்தால், ராஜ யோகம் உறுதி..!



