சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் ரிசல்ட் குறித்து நம்பிக்கையுடன் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இதுவரை திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி அமைத்த நிலையில் இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களம் இறங்கியது தேர்தல் களத்தை மேலும் சூடு படுத்தியுள்ளது.
சினிமா ரசிகர்களின் பெரும் ஆதரவை அரசியலுக்கு மாற்றும் முயற்சியில் விஜய் எடுத்துள்ள இந்தப் புதிய பயணம், ஆரம்பத்திலிருந்தே கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள், முதல் முறையாக வாக்களிக்கும் புதிய வாக்காளர்கள், பெண்கள் மற்றும் அரசியல் மாற்றத்தைக் காண விரும்பும் பொதுமக்கள் மத்தியில் விஜய்க்கு தனி வரவேற்பு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாரம்பரியமாக திமுக அதிமுக கட்சிகளுக்கு வாக்களித்து வந்த ஒரு பகுதி வாக்காளர்கள் கூட இந்த முறை மாற்றத்திற்காக விஜயின் தவெகவை நோக்கி திரும்பியிருக்கலாம் என்ற அரசியல் கணிப்புகள் வெளிவந்துள்ளன. இதனால், “விஜய் ஒரு ‘third force’ ஆக உருவெடுக்கிறாரா?” என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் எனக் கூறியுள்ளன. இந்த கருத்துக்கணிப்புகள் வெளியாகியவுடன், அவற்றை முழுமையாக நிராகரிக்கும் நிலைப்பாட்டை தமிழக வெற்றிக் கழகம் எடுத்துள்ளது .
இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜன் பண்டிட் கூறியதாவது:
“கருத்துக்கணிப்புகள் எங்களுக்குப் பொருந்தாது. நாங்கள் தரையில் நேரடியாக ஆய்வு செய்துள்ளோம். எங்கள் கணக்கெடுப்பின் படி 140 முதல் 170 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். குறைந்தபட்சம் 45 சதவீத வாக்குகள் கிடைக்கும். விஜய் முதலமைச்சராக வருவது உறுதி” என்றார். இந்தக் கூற்று அரசியல் சூழலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் கருத்துக்கணிப்புகள், மறுபுறம் தவெகவின் நம்பிக்கை இவ்விரண்டும் மோதும் சூழல் உருவாகியுள்ளது.
Read more: 9 பேர் பலி! அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. அதிகாலையில் சோகம்..!



