இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (மே 5, 2026) நடைபெற்ற அமர்வில், தமிழ் அரசியல் மற்றும் இருநாட்டு உறவுகளைச் சுற்றி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா.
தமிழக அரசியலில் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ள விஜய் முன்வைத்த கச்சத்தீவு தொடர்பான கோரிக்கையை எடுத்துக்காட்டிய அவர், “கச்சத்தீவை மட்டும் அல்ல, முழு யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். இந்தக் கருத்து நாடாளுமன்றத்தில் பேசப்பட்டவுடன் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், “தமிழகத்தின் புதிய முதலமைச்சராக உள்ள விஜய், தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார். ஒரு அடக்கப்பட்ட தமிழனாக அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அர்ச்சுனா கூறினார். இந்த பாராட்டு உரையும் கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக, கச்சத்தீவு தொடர்பாக விஜய் முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெளிவான மறுப்பு தெரிவித்திருந்தார். “அதை வழங்க முடியாது” என அவர் கூறியிருந்த நிலையில், அதைவிட மேலும் சென்று, முழு யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என அர்ச்சுனா வலியுறுத்தியது அரசியல் சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அதோடு, “தமிழ்நாட்டு மக்கள் எங்களைப் பார்த்துக் கொள்வார்கள்” என்ற அவரது கூற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இந்த விவகாரம் எதிர்காலத்தில் எந்த திசையில் நகரும், மத்திய அரசுகளின் பதில் என்னவாக இருக்கும் என்பதில் அரசியல் கண்காணிப்பாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய சாணக்கியன் இராசமாணிக்கம், “வரலாற்று சாதனைப் படைத்து வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு இலங்கையின் உயரிய சபை வாயிலாக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். இந்த வாழ்த்து வெறும் தனிப்பட்ட அங்கீகாரமாக மட்டும் இல்லாமல், இலங்கை பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ மேடையில் இருந்து வந்தது என்பதால் முக்கியதுவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.
Read more: ஆட்சியமைக்க காங்கிரஸின் ஆதரவை கோரிய விஜய்..! ராகுலின் முடிவு என்ன..? பரபரப்பு தகவல்..!



