பச்சைக் கோழிக்கறியை சமைப்பதற்கு முன் கழுவுவது ஒரு பொதுவான பழக்கமாக இருந்தாலும், அது ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான நடைமுறை அல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பச்சைக் கோழியில் பெரும்பாலும் சால்மோனெல்லா மற்றும் கேம்பிலோபாக்டர் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும்.
சிக்கனை ஓடும் நீரில் கழுவும்போது அந்த நீர் தெறித்து சமையலறையின் மேற்பரப்புகள், பாத்திரங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களுக்கும் பாக்டீரியா பரவ வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் இந்த நீர்த்துளிகள் ஒரு மீட்டர் தூரம் வரை செல்லக்கூடும் என்பதால் குறுக்கு மாசுபாடு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுவதாவது, கழுவுவது பாக்டீரியாவை அகற்றாது; மாறாக அதை பரப்பும் வாய்ப்பை அதிகரிக்கிறது. உணவுப் பாதுகாப்புக்கான ஒரே நம்பகமான வழி, கோழிக்கறியை சரியான வெப்பநிலையில் முழுமையாக சமைப்பதே ஆகும். குறைந்தது 75°C வரை சமைத்தால் மட்டுமே தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
சிலர் உள்ளூர் கடைகளில் வாங்கும் கோழியில் அழுக்கு, இரத்தம் அல்லது இறகுகள் இருப்பதால் அதை கழுவ வேண்டியதாக உணர்கிறார்கள். ஆனால் நிபுணர்கள் இதற்கும் மாற்று வழியை பரிந்துரைக்கின்றனர். ஓடும் நீரில் கழுவுவதற்குப் பதிலாக, ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி மெதுவாக சுத்தம் செய்வது குறைந்த அபாயம் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் கையுறைகள் பயன்படுத்துவது, மற்றும் பின்னர் அனைத்து மேற்பரப்புகளையும் சுத்தம் செய்வது அவசியம் என்றும் கூறப்படுகிறது.
பச்சைக் கோழியை கையாள்ந்த பிறகு, குறைந்தது 20 வினாடிகள் சோப்பு மற்றும் நீரால் கைகளை கழுவ வேண்டும் என்றும், வெட்டும் பலகை, கத்தி, சமையலறை மேடை போன்றவற்றை கிருமி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இது உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Read more: Flash: ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநர்.. உச்சநீதிமன்றத்தை உடனடியாக நாடும் தவெக..!



