தவெக தலைவர் விஜயின் நீலாங்கரை வீட்டில் பாதுகாப்பு பணிகளுக்காக வைத்திருந்த மெட்டல் டிடெக்டர்களை அகற்றி போலீசார் எடுத்து சென்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், கட்சித் தலைவர் மற்றும் முக்கிய அரசியல் தலைவராக விஜய்க்கு அரசு சார்பில் நான்கு கான்வாய் வாகனங்கள் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதோடு நீலாங்கரை வீட்டின் முன் உயர்மட்ட பாதுகாப்புக்காக 2 மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை அவருக்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. மேலும், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பேரிகார்டுகளும் அகற்றப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர்களையும் அங்கிருந்து அகற்றிய போலீசார் வாகனத்தில் கொண்டு சென்றனர். இதனால் அங்கு இருந்த தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏன் திடீரென வாபஸ் பெறப்பட்டது என்பது குறித்து காவல்துறை அல்லது அரசு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஒருபுறம் ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு புறம் பாதுகாப்பு விலக்கப்பட்ட விவகாரமும் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையில், தவெக தொண்டர்கள் தங்கள் தலைவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 108 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், விஜய்க்கு முழுமையான பாதுகாப்பு அவசியம் என அவர்கள் கூறுகின்றனர்.
Read more: Flash: ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநர்.. உச்சநீதிமன்றத்தை உடனடியாக நாடும் தவெக..!



