இந்திய வீடுகளில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, முக்கிய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தங்க இறக்குமதி நாடுகளில் ஒன்றான இந்தியா, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி, ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இந்தியர்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தினால் தங்க விலை குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகளாவிய தங்க தேவையில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியது. உலக தங்க பயன்பாட்டில் சுமார் 25 சதவீதம் இந்தியர்களால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவில் தங்க கொள்முதல் திடீரென குறைந்தால், சர்வதேச சந்தைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கலாம். லண்டன், நியூயார்க் போன்ற முக்கிய தங்க சந்தைகளில் தேவைக் குறைவு ஏற்பட்டு, உலகளாவிய தங்க விலைகளில் சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதேபோல், இந்தியாவில் உள்ள நகைக்கடைகள் மற்றும் வர்த்தகர்களின் மீதான அழுத்தமும் குறையக்கூடும். உள்நாட்டில் தேவைக் குறைவு ஏற்பட்டால், தற்போதைய விலையுடன் ஒப்பிடும்போது தங்க விலை ஓரளவு குறையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா தனது தங்க தேவையின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை இறக்குமதியிலேயே சார்ந்துள்ளது. எனவே, தங்க இறக்குமதி குறைந்தால், நாட்டின் அந்நியச் செலாவணி சேமிப்பு அதிகரிக்கலாம். அமெரிக்க டாலரின் தேவையும் குறையக்கூடும். இதனால் இந்திய ரூபாய் வலுப்பெறும் சூழ்நிலை உருவாகலாம்.
ரூபாய் மதிப்பு உயர்ந்தால், கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பிற இறக்குமதி பொருட்களின் விலையிலும் குறைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்தால், அந்த சேமிப்புகள் வங்கி வைப்புகள், பரஸ்பர நிதிகள், பங்குச் சந்தை மற்றும் தொழில் முதலீடுகளுக்கு செல்லக்கூடும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பணப்புழக்கத்திற்கும் உதவியாக அமையும் என கூறப்படுகிறது.
Read more: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராகவே வாக்களிப்போம்.. ஓ.எஸ். மணியன் அதிரடி பேட்டி..!



