சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசிய மன்னார்குடி அமமுக MLA காமராஜை கட்சியில் இருந்து நீக்கி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகர் இன்று தேர்வானார்.. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒரே எம்.எல்.ஏவான காமராஜ் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசை வெளிப்படையாக பாராட்டினார்.
அவர் பேசுகையில், “தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு முழு 5 ஆண்டுகளும் நீடிக்க வேண்டும். தமிழக இளைஞர்களும் நாங்களும் விஜய்யை நம்புகிறோம். அவர் நல்லாட்சியை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், தவெக அரசுக்கு தனது ஆதரவு தொடரும் என்றும் கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மைக்காக பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவை நாடியிருந்தது. அப்போது காமராஜ் ஆதரவு கடிதம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. அந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு ஆளுநரிடம் தவெக ஆதரவை சமர்ப்பித்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதற்கு டி.டி.வி.தினகரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். காமராஜின் கையெழுத்து போலியாக பயன்படுத்தப்பட்டதாகவும், தவெக தரப்பு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசிய காமராஜை அமமுகவிலிருந்து நீக்கி டிடிவி தினகரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Read more: இந்தியர்கள் ஓராண்டு தங்கம் வாங்காமல் இருந்தால் தங்கத்தின் விலை குறையுமா..?



