சிங்கப்பூரின் கடுமையான குடிமை சட்டங்கள் மீண்டும் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, அரசுக்குச் சொந்தமான அல்லது பொதுநிலங்களில் உள்ள பழ மரங்களில் இருந்து விழுந்த பழங்களைக் கூட அனுமதியின்றி எடுக்கக் கூடாது என்ற விதி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா சின்ஹா என்பவர், X சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவே இந்த விவாதத்திற்கு காரணமாகியுள்ளது. அவர் பகிர்ந்த தகவலின்படி, சிங்கப்பூரில் பொது இடங்களில் உள்ள மாமரம் உள்ளிட்ட பழ மரங்கள் அரசாங்கச் சொத்தாகக் கருதப்படுகின்றன. அந்த மரங்களில் இருந்து பழங்களைப் பறிப்பதோ, தரையில் விழுந்த பழங்களை எடுத்துச் செல்லுவதோ கூட சட்டவிரோதமாகும்.
அனுமதி இல்லாமல் பழம் எடுத்தால் என்ன தண்டனை? சிங்கப்பூரின் “Parks and Trees Act” எனப்படும் பூங்காக்கள் மற்றும் மரங்கள் சட்டத்தின்படி, தேசிய பூங்காக்கள் ஆணையமான NParks அனுமதி இன்றி பொதுப் பூங்காக்களில் உள்ள மரங்களிலிருந்து பழங்களை சேகரிக்கக் கூடாது.
இந்த விதியை மீறுபவர்களுக்கு பொதுப் பூங்காக்களில் அதிகபட்சமாக 5,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.5 லட்சம் வரை அபராதம். இயற்கைக் காப்பகங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களில் 50,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம். மேலும் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இத்தனை கடுமையான சட்டம்? சிங்கப்பூர் அரசு, பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது மற்றும் பொது ஒழுங்கை பேணுவது என்பதற்காக இத்தகைய கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பொதுநிலங்களில் உள்ள மரங்கள் மற்றும் அவற்றின் கனிகள் அரசின் சொத்தாகவே கருதப்படுகின்றன. அமைச்சகத்தின் தகவலின்படி, அரசு நிலங்களில் உள்ள மரங்கள் பெரும்பாலும் NParks மூலம் பராமரிக்கப்படுகின்றன. பொதுமக்கள் பழங்களை சேகரிக்க விரும்பினால், முன்கூட்டியே அதிகாரப்பூர்வ அனுமதி பெற வேண்டும்.
இந்த தகவல் இந்திய சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், பலரும் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்தனர். இந்தியாவில் சாலையோர மரங்களில் இருந்து மக்கள் சுதந்திரமாக பழங்களைப் பறிப்பது வழக்கமான ஒன்று என்பதால், “கீழே விழுந்த மாம்பழம் எடுத்ததற்கே அபராதமா?” என பலர் கேள்வி எழுப்பினர்.
ஒரு பயனர், “செல்லப்பிராணி மாம்பழம் எடுத்தால் என்ன ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மற்றொருவர், “சிங்கப்பூரில் செல்லப்பிராணியும் உரிமையாளரின் பொறுப்பில்தான் வரும். அபராதமும் உரிமையாளருக்கே!” என பதிலளித்தார்.
Read more: விஜய்யின் ஜோதிடர் ரத்தன் பண்டிட்-க்கு அரசுப் பதவி வழங்கிய உத்தரவை வாபஸ் பெற்றது தமிழக அரசு..!



