அதிமுக இருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ல அறிக்கையில் “ தேர்தலுக்கு பின் அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை உண்டாக்கிவிட்டது.. அதிமுக தொண்டர்களும் மிகுந்த மன வேதனையில் இருந்து வருகின்றனர்.. நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தியாக இல்லை.. எம்.ஜி.ஆர் தொடங்கிய, ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கத்துக்கு இந்த கதியா..
ஜெயலலிதா மறைவுக்கு பின் எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டது, தடுக்கப்பட்டது.. அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், எனது ஆதங்கத்தை தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடந்தேன்..
கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா, நோகுதய்யா, மனசு நோகுதயா என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும்.. உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது என்று பிரபல ஆங்கில நாளிதழ் பரிகாசம் செய்யும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.
இப்போது அதிமுகவில் உருவாகி உள்ள சூழ்நிலைகளை பார்க்கும் போது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை.. மனம் வேதனைப்படுகிறது. எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு, அரசியல் வானில் அடையாளம் காட்டப்பட்ட ஒரு ஒளிரும் நட்சத்திரமாக என்னை ஆளாக்கி அழகு பார்த்த மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், நான் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்புக் கோரி கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகிக் கொள்கிறேன் என்பதை தலைமைக்கு வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..



