ஒரு காலத்தில் உலக வரைபடத்தில் பாலின சமத்துவமின்மைக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்ட நாடாக இந்தியா பார்க்கப்பட்டது. குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் சமூக மனப்பான்மை, பெண் குழந்தைகள் குறைவாக பிறப்பது போன்ற காரணங்களால் இந்தியா பல சர்வதேச அறிக்கைகளில் எதிர்மறையாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், காலப்போக்கில் விழிப்புணர்வு, கல்வி வளர்ச்சி மற்றும் பெண்களின் சமூக முன்னேற்றம் காரணமாக நிலைமை கணிசமாக மாறி வருகிறது.
ஆனால், உலகின் சில நாடுகளில் முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது. அங்கு ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், ஆயிரக்கணக்கான பெண்கள் தகுந்த வாழ்க்கைத் துணையைத் தேடி நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சில நாடுகளில் பெண்கள் பெரும்பான்மையாக வாழ்வதற்குக் காரணம், ஆண்களின் குறைந்த ஆயுட்காலம்; சில இடங்களில் வேலைக்காக ஆண்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதே முக்கிய காரணமாக உள்ளது.
பெண்கள் அதிகம் வாழும் ஹாங்காங்: ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தக மையங்களில் ஒன்றாக விளங்கும் ஹாங்காங்கில், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு ஒரு ஆணுக்கு சுமார் ஒரு புள்ளி பதினாறு பெண்கள் வாழ்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பெண் வீட்டுப் பணியாளர்கள் குடிபெயர்வதும், பெண்களின் ஆயுட்காலம் ஆண்களை விட நீண்டதாக இருப்பதும் இந்த ஏற்றத்தாழ்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவில் பெண்களே பெரும்பான்மை: உலகில் பாலின சமநிலை குறித்து அதிகம் பேசப்படும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. அங்கு பல வயதுப் பிரிவுகளிலும் பெண்களே அதிகமாக உள்ளனர். வரலாற்றுப் போர்கள், விபத்து மரணங்கள், மதுபான பழக்கம் மற்றும் ஆண்களிடையே அதிகமாக காணப்படும் உடல்நலப் பிரச்சினைகள் ஆகியவை ஆண் மக்கள்தொகையை கணிசமாகக் குறைத்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வேலைக்காக வெளியேறும் ஆண்கள்: ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் நிலைமை இன்னும் வித்தியாசமாக உள்ளது. அங்கு பல ஆண்கள் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக இடம்பெயர்ந்து விடுவதால், பெண்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இதனால் நகர்ப்புறங்களில் திருமண வயதுடைய பெண்கள் தகுந்த துணையைத் தேடி நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல, கரீபியன் கடலில் அமைந்துள்ள புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் மால்டோவா போன்ற நாடுகளிலும் வேலை வாய்ப்புக்காக ஆண்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வது அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகமாக வாழும் சமூக அமைப்பு உருவாகியுள்ளது.
ஆயுட்காலம் உருவாக்கும் மாற்றம்: பெலாரஸ், லாட்வியா மற்றும் லித்துவேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம், பெண்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்வதே ஆகும். அங்கு ஆண்களின் ஆயுட்காலம் குறைவாக இருப்பதால், முதியோர் மக்கள்தொகையில் பெண்களே பெரும்பான்மையாக உள்ளனர். இதன் விளைவாக, பல பெண்கள் திருமண வாய்ப்பு இல்லாமல் தனிமையை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இந்தப் பிரச்சினை தீவிரமாக இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிறிய நாடுகளிலும் பெரிய தாக்கம்: பஹாமாஸ் மற்றும் அங்குவிலா போன்ற சிறிய தீவு நாடுகளிலும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளது. இந்நாடுகளின் மொத்த மக்கள்தொகை குறைவாக இருப்பதால், சிறிய மக்கள் மாற்றங்கள்கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக ஆண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதும், பெண்களின் அதிக ஆயுட்காலமும் பாலின சமநிலையை மாற்றியமைத்துள்ளது.
சமூக அமைப்பில் மாற்றம்: பாலின சமநிலையின்மை என்பது வெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரச்சினை மட்டும் அல்ல. அது சமூக உறவுகள், குடும்ப அமைப்பு, திருமண முறை மற்றும் பொருளாதார நிலைகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில நாடுகளில் திருமண வயதுடைய பெண்கள் அதிகமாக இருப்பதால், திருமண விகிதம் குறைவதாகவும், தனிமையில் வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Read more: கேரள முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்பு; 10 ஆண்டுகால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி..!



