தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றுவது குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியிடப்பட்டன. மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, புதிய அரசு பொறுப்பேற்கும் முன்பே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், முதல் முறையாக வாட்ஸ் அப் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மே 20ஆம் தேதி 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திட்டமிட்ட தேதியிலேயே முடிவுகளை வெளியிடுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு மற்றும் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: கேரள முதலமைச்சராக வி.டி. சதீசன் பதவியேற்பு; 10 ஆண்டுகால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி..!



