டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய உலகத் தலைவர்களைப் போல தோற்றமளிப்பதாகக் கூறப்படும் இரண்டு எருமைகள் தற்போது பங்களாதேஷ் நாட்டில் இணையத்தை கலக்கி வருகின்றன. ஈத் அல்-அதா பண்டிகையை முன்னிட்டு கால்நடை சந்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த இரு எருமைகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
டாக்கா அருகே உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் சுமார் 700 கிலோ எடையுடைய அல்பினோ எருமைக்கு மக்கள் “டொனால்ட் டிரம்ப்” என செல்லப்பெயர் சூட்டியுள்ளனர். அதன் வெளிறிய தோல் மற்றும் மஞ்சள் கலந்த வெள்ளை முடி, டிரம்பின் பிரபலமான சிகை அலங்காரத்தை நினைவூட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த எருமையுடன் செல்ஃபி எடுக்க பொதுமக்கள் போட்டியிடுகின்றனர்.
அந்த எருமையின் உரிமையாளர் ஜியாவுதீன் மிருதா கூறுகையில், “என் தம்பி முதலில் இந்த ஒற்றுமையை கவனித்தார். குடும்பத்திலேயே நகைச்சுவையாக வைத்த பெயர் இன்று இணையத்தில் வைரலாகிவிட்டது” என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பெயருக்கு மாறாக அந்த எருமை மிகவும் அமைதியான குணம் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல், நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள மற்றொரு 750 கிலோ எடையுள்ள எருமைக்கு “நெதன்யாகு” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த எருமை மிகவும் ஆக்ரோஷமான குணம் கொண்டதாகவும், அடிக்கடி சீறிக்கொண்டு பராமரிப்பாளர்களை நோக்கி பாய்வதாகவும் பண்ணைத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன் வலுவான உடலமைப்பும், கடுமையான நடத்தைமுறையும் இணையத்தில் மீம்களாக பரவி வருகின்றன.
ஒரு எருமை அமைதியானது; மற்றொன்று ஆக்ரோஷமானது என்ற முரண்பட்ட குணங்கள் சமூக வலைதளங்களில் நகைச்சுவை விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. “யார் உண்மையில் டிரம்பைப் போல?”, “நெதன்யாகு எருமை உண்மையிலேயே கோபக்காரனா?” போன்ற கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஈத் அல்-அதா பண்டிகை காலத்தில் வங்காளதேசத்தில் மாடுகள், ஆடுகள், எருமைகள் போன்ற விலங்குகள் பெருமளவில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, சமூக வலைதளங்களின் தாக்கத்தால் கால்நடைப் பண்ணைகளே சுற்றுலாத் தலங்களைப் போல மாறியுள்ளன. மக்கள் அந்த எருமைகளை நேரில் பார்க்க நீண்ட தூரம் பயணம் செய்து புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.



