இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கெளதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீதான அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க நீதித்துறை நிரந்தரமாக தள்ளுபடி செய்தது. இதன்மூலம், நியூயார்க்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பங்குச் சந்தை மற்றும் கம்பிவழி மோசடி வழக்கு முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் முடிவு செய்ததைத் தொடர்ந்து, வழக்கை மேலும் தொடர வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதானி மற்றும் சாகர் அதானி மீதான குற்றப்பத்திரிகையை முழுமையாகத் தள்ளுபடி செய்ய அமெரிக்க நீதித்துறை கோரிக்கை விடுத்தது. இந்த தள்ளுபடி நிரந்தரமானது என்பதால், அதே வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதற்கு முன், இந்தியாவில் சூரிய மின்சக்தி திட்டங்கள் தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் குறித்த சிவில் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தீர்வு கண்டிருந்தது. அதன்படி, தவறை ஒப்புக்கொள்ளாமலும் மறுக்காமலும், கௌதம் அதானி சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலரும், சாகர் அதானி 12 மில்லியன் அமெரிக்க டாலரும் செலுத்த ஒப்புக்கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
அதேபோல், ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளை மீறி எரிவாயு இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கும் தீர்வு காணப்பட்டது. விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை அளித்ததோடு, முன்கூட்டியே தகவல்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, அதானி குழுமம் 275 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை செலுத்த ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு இறுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 265 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான லஞ்சத் திட்டம் நடைபெற்றதாகவும், அதன் விவரங்கள் அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், அதானி தரப்பில் ஆஜரான சட்ட ஆலோசகர்கள், இந்த வழக்கில் அமெரிக்கப் பத்திரச் சட்டங்கள் தேவையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக வாதிட்டனர். சம்பவங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே நடந்ததாகவும், அமெரிக்கப் பங்குச் சந்தைகளுடன் நேரடி தொடர்பு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், முதலீட்டாளர்களுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும், அனைத்து பத்திரச் சட்ட நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டன என்றும் பாதுகாப்புத் தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.
பல மாதங்களாக நடைபெற்ற தீவிர சட்டப் போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடந்த நிலையில், இறுதியாக அமெரிக்க நீதித்துறை வழக்கை முழுமையாக கைவிட்டுள்ளது. இதன் மூலம், உலகளாவிய அளவில் தனது வர்த்தக விரிவாக்கத் திட்டங்களை முன்னெடுத்து வந்த அதானி குழுமத்திற்கு மிகப்பெரிய நிம்மதி கிடைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த வழக்கில், அமெரிக்காவுடன் தெளிவான தொடர்புகள் இல்லை என்பதும், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதும் அரசுத் தரப்பின் முடிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Read more: திமுக – அதிமுக இணைந்தால் தமிழ்நாட்டிற்கு தான் நல்லது.. உடைத்து பேசிய வன்னி அரசு..!



