இளைஞர்கள் முறையான தகுதி இல்லாமல் பல துறைகளில் நுழைந்து அமைப்புகளை விமர்சிக்கிறார்கள் என கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த் கருத்து தெரிவித்த நிலையில், இணையத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்தை எதிர்த்து பல சமூக வலைதள பயனர்கள், அது வேலையில்லா இளைஞர்களையும் இளம் தொழிலாளர்களையும் அவமதிப்பதாகக் குற்றம்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் ஒரு நையாண்டி சமூக வலைதளக் கணக்கு உருவானது. அந்தக் குழு தன்னை “இளைஞர்களின் குரல்” என விவரித்துக் கொண்டு, அரசியல் அமைப்புகளை நையாண்டி செய்யும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. “மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக மற்றும் சோம்பேறி அமைப்பு” எனவும் அது சிரிப்பூட்டும் வகையில் விவரித்துள்ளது.
இந்த கணக்கு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் பின்தொடரத் தொடங்கியதாகவும், பின்னர் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்களான மஹுவா மொய்த்ரா மற்றும் கீர்த்தி ஆசாத் ஆகியோர் சமூக வலைதளத்தில் இந்த நையாண்டி குழுவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்தக் குழு வெளியிட்ட பதிவுகளில் உறுப்பினர் சேர்க்கை நிபந்தனைகள் எனும் பெயரில் நையாண்டியான விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன. “தொடர்ந்து இணையத்தில் இருப்பது”, “வேலை இல்லாத நிலை” போன்றவை இதில் குறிப்பிடப்பட்டிருந்தன. இது மேலும் நகைச்சுவை மற்றும் விமர்சனத்துக்குப் பொருளானது.
இந்த சர்ச்சை பெரிதாக பரவிய பின்னர், தலைமை நீதிபதி தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாக வெளியான கருத்துகள் வேலையில்லா இளைஞர்களை நோக்கி அல்ல என்றும், போலி பட்டங்கள் மற்றும் மோசடி வழிகளில் தொழில்களில் நுழைவோரைக் குறித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய இளைஞர்கள் மீது தமக்கு பெருமிதம் இருப்பதாகவும், அவர்களின் திறமை நாட்டிற்கு வலிமை சேர்க்கிறது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.



