தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் புதியதாக 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக கூறப்படுவதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மே 10ஆம் தேதி முதல்வராக விஜய் பதவியேற்றபோது, அவருடன் சேர்ந்து 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். பின்னர் சில முக்கிய துறைகளுக்கு மட்டும் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இன்னும் பல முக்கிய துறைகள் காலியாகவே இருந்தன. குறிப்பாக 20-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாததால், அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என்று அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள விரிவாக்கத்தில் தவெக கூட்டணிக் கட்சிகளுக்கும் முக்கிய பங்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக சார்பில் வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் சார்பில் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கலாம் என கூறப்படுகிறது.
மொத்தமாக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 21 பேர் முதல் 23 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் தவெக சார்பில் மட்டும் 19 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக சார்பில் முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் ஸ்ரீநாத், மரியா வில்சன், பார்த்திபன், பர்வேஸ் உள்ளிட்டோரின் பெயர்களும் அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் தவெக 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாதது கட்சிக்குள் விவாதமாக மாறியிருந்தது. அந்த மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், பிராந்திய சமநிலையை கருத்தில் கொண்டு அமைச்சரவை அமைக்கப்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.



