ஈரான் – இஸ்ரேல் மோதலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ள சூழலில், அதன் தாக்கம் தற்போது இந்திய ரயில்வே உணவுச் சேவைகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வால் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ள ரயில்வே உணவு ஒப்பந்ததாரர்கள், ரயில்களில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய ரயில்வேயில் உணவு மற்றும் கேட்டரிங் சேவைகளை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்களின் அமைப்பான இந்திய ரயில்வே நடமாடும் உணவு வழங்குநர்கள் சங்கம் (IRMCA), இந்த கோரிக்கையை அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது. இந்த அமைப்பிற்கு, ஆர்.கே. பிசினஸ் குரூப்பின் உரிமையாளராக கூறப்படும் ஷரன் பிஹாரி அகர்வால் தலைமை தாங்கி வருகிறார்.
ராஜ்தானி, சதாப்தி மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களில் இயங்கும் உணவுச் சேவைகளில், இந்த அமைப்பின் கீழ் உள்ள நிறுவனங்கள் சுமார் 70 சதவீத சேவைகளை நிர்வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இவர்களின் கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சமீபத்தில் IRCTC நிறுவனத்தின் உணவுச் சேவை இயக்குநருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், 2019ஆம் ஆண்டிலேயே உணவுப் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சமையல் பொருட்கள், எரிவாயு, போக்குவரத்து மற்றும் ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் 250 சதவீதம் வரை உயர்ந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் தற்போதைய கட்டணத்தில் தரமான உணவு வழங்குவது கடினமாக இருப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது. உணவு மற்றும் சேவைகளின் தரத்தை பராமரிக்க வேண்டுமெனில், உணவு மற்றும் பானங்களின் விலையை உடனடியாக திருத்தியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது ரயில்வே உணவுச் சேவைகள் இரண்டு வகைகளாக வழங்கப்படுகின்றன. ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில்களில், டிக்கெட் முன்பதிவின்போதே உணவுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை “ப்ரீபெய்ட்” சேவைகள் என அழைக்கப்படுகின்றன. மற்ற சாதாரண ரயில்களில், பயணிகள் உணவை வாங்கிய பிறகு பணம் செலுத்துவதால், அவை “போஸ்ட்பெய்ட்” சேவைகளாக கருதப்படுகின்றன.
இந்த இரு வகை சேவைகளிலும் விலையை உயர்த்த வேண்டும் என IRMCA கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக செலவுகள் 250 சதவீதம் உயர்ந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் ரயில்வே பயணிகளுக்கு கூடுதல் செலவு சுமை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் ரயில்வே ஒப்பந்த விதிமுறைகள் வேறுபட்ட நிலையை காட்டுகின்றன. ரயில்களில் உள்ள சமையலறைப் பெட்டிகளுக்கான ஒப்பந்தங்கள் “நிலையான விலை வழங்கல்” என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அதாவது, ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில் விலையை மாற்ற முடியாது என்பதே முக்கிய நிபந்தனையாக உள்ளது.
இதனால், ஒப்பந்த காலத்தின் நடுவில் விலையை உயர்த்த ஒப்பந்ததாரர்கள் அழுத்தம் கொடுக்க முடியாது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்கால டெண்டர்களில் மட்டுமே புதிய விலை அமல்படுத்தப்பட முடியும் என்றும், தற்போதுள்ள ஒப்பந்தங்கள் பழைய கட்டணத்திலேயே தொடர வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், ரயில்களில் டீ, காபி, சமோசா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயருமா என்ற கேள்வி பயணிகளிடையே எழுந்துள்ளது.
Read more: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. விசிக, ஐயூஎம்எல் இடம் பெறுமா..? எதிர்ப்பார்ப்பில் தமிழகம்..



