இந்தியாவின் மத்திய மருந்து கட்டுப்பாட்டாளர் (CDSCO), ஊசி மூலம் செலுத்தப்படும் அழகு சிகிச்சைகள் குறித்து புதிய தெளிவான சட்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊசி வடிவில் வழங்கப்படும் எந்தவொரு பொருளும் “அழகுசாதனப் பொருள்” என வகைப்படுத்தப்படாது என்றும், அவற்றை நுகர்வோர், அழகு நிலையங்கள் அல்லது தொழில்முறை நிபுணர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் மற்றும் 2020 விதிகளின் கீழ், அழகுசாதனப் பொருட்கள் என்பது உடலை சுத்தம் செய்ய, அழகுபடுத்த அல்லது தோற்றத்தை மாற்ற “தேய்க்க, ஊற்ற, தெளிக்க” பயன்படும் பொருட்களாக மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஊசி மூலம் செலுத்தப்படும் பொருட்கள் இந்த வரையறைக்குள் வராது என CDSCO தெளிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அழகு நிலையங்கள் மற்றும் ஆரோக்கிய மையங்களில் அறுவை சிகிச்சையற்ற அழகு சிகிச்சைகள் அதிகரித்து வரும் நிலையில், தவறான விளம்பரங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவ நடைமுறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இத்தகைய சிகிச்சைகள் பாதுகாப்பான மாற்றாக பிரபலப்படுத்தப்படுவது கவலைக்குரியது என்றும் கூறப்பட்டுள்ளது.
CDSCO மேலும், அழகு சாதனப் பொருட்களை சிகிச்சை நோக்கங்களுக்காக பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என எச்சரித்துள்ளது. தவறான விளம்பரங்கள், தடைசெய்யப்பட்ட மூலப்பொருட்களின் பயன்பாடு உள்ளிட்டவை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைக்கு உள்ளாகும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற மீறல்களை பொதுமக்கள் மாநில உரிமம் வழங்கும் அதிகாரிகள் அல்லது CDSCO-வுக்கு நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அழகியல் சிகிச்சை மையங்கள் அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Read more: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் X கணக்கு முடக்கம்..! இன்ஸ்டாவில் மட்டும் 18.9 மில்லியன் ஃபாலோவர்ஸ்..



