பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத் தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய முக்கிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) பார்க்கப்படுகிறது. அதிக வட்டி விகிதம், வரிச்சலுகை மற்றும் அரசின் பாதுகாப்பு என்பதால் பெற்றோர்கள் அதிகமாக தேர்வு செய்யும் திட்டமாக இது உள்ளது. ஆனால், மகளின் உயர்கல்வி அல்லது திடீர் அவசரத் தேவைகளுக்காக திட்டம் முழுமையாக முதிர்வடைவதற்கு முன்பே பணத்தை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் பலரிடமும் எழுகிறது.
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்கலாம். குழந்தையின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த திட்டத்தில் முன்கூட்டியே பகுதியளவு பணம் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் அது சில நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. கணக்கில் இருக்கும் தொகையில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை மட்டும் எடுக்க முடியும். அதுவும் முந்தைய நிதியாண்டின் இறுதியில் இருந்த இருப்புத் தொகையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். தேவைக்கேற்ப ஒரே முறையிலோ அல்லது தவணை முறையிலோ பணத்தை பெறலாம்.
ஆனால் இந்த தொகையை எந்த தேவைக்கும் பயன்படுத்த முடியாது. அரசின் விதிப்படி, மகளின் உயர்கல்விக்காக மட்டுமே இந்தப் பணத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி சேர்க்கை ஆவணம், கட்டண ரசீது அல்லது கல்வி தொடர்பான சான்றுகள் போன்றவை சமர்ப்பிக்கப்பட்ட பிறகே வங்கி அல்லது தபால் அலுவலகம் பணத்தை வழங்கும். குடும்பச் செலவுகள் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த தொகையை பயன்படுத்த முடியாது.
மேலும், 21 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பே முழு கணக்கையும் மூடுவதற்கும் சில சிறப்பு சூழ்நிலைகளில் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்து திருமணம் நடைபெற இருந்தால், திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பும், திருமணத்திற்குப் பிறகு மூன்று மாதங்களுக்குள்ளும் கணக்கை மூடி முழுத் தொகையையும் பெறலாம்.
அதேபோல், கணக்கு வைத்திருக்கும் குழந்தை உயிரிழந்தால், முழுத் தொகையும் பாதுகாவலருக்கு வழங்கப்படும். குடும்பத்தில் கடுமையான நிதி நெருக்கடி, தீவிர நோய், அல்லது பெற்றோரில் ஒருவரின் மரணம் போன்ற சூழ்நிலைகளில், தேவையான சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பிறகு முன்கூட்டியே கணக்கை மூட அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பணம் எடுக்கும் நடைமுறையும் மிகவும் எளிமையானது. முதலில் கணக்கு இருக்கும் வங்கி அல்லது தபால் நிலையத்தில் இருந்து பணம் எடுக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பெற வேண்டும். பின்னர் பெண் குழந்தையின் வயது சான்று, கல்வி தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்த பிறகு, தொகை பாதுகாவலர் அல்லது குழந்தையின் கணக்கிற்கு மாற்றப்படும்.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுவதாவது, சுகன்யா சம்ரித்தி யோஜனா ஒரு நீண்டகால சேமிப்பு திட்டமாக இருப்பதால், குழந்தையின் அனைத்து எதிர்கால தேவைகளுக்கும் இதை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது என்பதாகும். பள்ளிக் கட்டணம், குறுகியகால செலவுகள் போன்றவற்றிற்காக மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸ்டு டெபாசிட் (FD) போன்ற பிற முதலீட்டு திட்டங்களையும் இணைத்து பயன்படுத்துவது நல்லது என அறிவுறுத்துகின்றனர்.



