கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. ஆட்சி அமையும் போது முதலமைச்சர் யார் என்பதில் சித்தராமையா, டி.கே சிவகுமாருக்கு கடும் போட்டி நிலவியது.. இதனையடுத்து கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது..
இதையடுத்து கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி வகித்து வருகின்றனர்.. எனினும் 2.5 ஆண்டுகள் ஆன பிறகு, டி.கே.சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வந்தனர்.. இது காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..
இந்த சூழலில் கர்நாடக அரசியல் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது.. காங்கிரஸ் தலைமை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார்..
இந்த நிலையில் டி.கே. சிவக்குமார் ஜூன் 3-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, டி.கே. சிவக்குமார் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.. மேலும் பதவியேற்பு விழாவுக்கு ஜூன் 3-ஆம் தேதியை ஒதுக்குமாறும் கோரிக்கை விடுக்க உள்ளார்.
முன்னதாக இன்று புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு குறித்து விவாதிப்பதற்காக சிவக்குமார் இன்று காலை ஆளுநரைச் சந்தித்தார். ஏனெனில், ஆளுநர் இன்று பிற்பகல் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலத்திற்குப் புறப்படவுள்ளார்.. அங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குடியரசுத் துணைத் தலைவரின் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார்.
பதவியேற்பு விழா ஞாயிறு அல்லது திங்கட்கிழமையன்று நடைபெறக்கூடும் என்று முதலில் கூறப்பட்டது.. ஆனால் தற்போது ஜூன் 3-ம் தேதி டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவியேற்க உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பதவியேற்பு விழா ‘லோக் பவனில்’ நடைபெறுவதா அல்லது கர்நாடகாவின் தலைமைச் செயலகத்தில் படிக்கட்டுகளில் நடைபெறுவதா என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
கட்சிப் பார்வையாளர்கள் முன்னிலையில் CLP கூட்டம்
முன்னதாக நேற்று , காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (CLP) கூட்டம், கட்சியின் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று சிவக்குமார் கூறியிருந்தார். தலைமை மாற்றம் குறித்தும், அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிவக்குமார், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே அதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
“காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவரை அவர்கள் எப்போது தேர்ந்தெடுப்பார்கள் என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை. அது முடிந்த பிறகு, நாம் இதுகுறித்து விவாதிக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.



