பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ரவாலகோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 37-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மலிவு விலையில் மாவு, அரிசி, மின்சாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி சாதாரண குடிமக்கள் அமைதியான வழியில் போராடினர்.. ஆனால் ராணுவம் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஒரு பயங்கரமான சூழலாக மாறியது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 பேர் பலி
எச்சரிக்கை ஏதுமின்றி பாகிஸ்தான் படைகள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ரவாலகோட்டில் சுமார் 60,000 முதல் 70,000 பேர் கூடியிருந்தனர். பொருளாதார நெருக்கடிக்கு எதிராகக் குரல் கொடுக்க வந்த ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் திடீரென தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதன் விளைவாக ரவாலகோட் முழுவதும் துயரமான காட்சிகள் காணப்படுகின்றன. ரத்தம் படிந்த சாலைகள், ரத்தத்தில் நனைந்த வயல்வெளிகள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் துயருறும் குடும்பங்கள் ஆகியவை இந்த ஒடுக்குமுறையின் மனித இழப்புக்கான அடையாளங்களாக மாறியுள்ளன.
பல குடியிருப்பாளர்களுக்கு, இந்தத் துயரம் இன்று தொடங்கவில்லை. வெள்ளிக்கிழமை முதல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையில் 53 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு எண்ணிக்கைக்குப் பின்னாலும் தந்தை, மகன், சகோதரன், மகள் அல்லது நண்பரை இழந்த ஒரு குடும்பம் உள்ளது.
தொடரும் போராட்டம்
இந்தக் கொலைகள் அப்பகுதி முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. காய் காலா (Khai Gala) கிராமத்தில், மக்கள் சந்தைகளை மூடிவிட்டு வன்முறைக்கு எதிராக ஊர்வலம் சென்றனர். கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி நடைபெற்ற போராட்டங்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பங்கேற்றனர். இந்த பயங்கரவாதம் சீருடை அணிந்தவர்களால் நடத்தப்படுகிறது என்ற முழக்கத்தை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.. இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் ஒரு முக்கிய முழக்கமாக மாறியுள்ளது.
பலர் கொல்லப்பட்ட போதிலும் போராட்டக்காரர்கள் தங்கள் இயக்கத்தைக் கைவிட மறுத்துவிட்டனர். பொருளாதார நிவாரணம் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடர உறுதியுடன் ஆயிரக்கணக்கானோர் ரவாலகோட்டில் தொடர்ந்து கூடியுள்ளனர். அங்கு துயரம், கோபம் மற்றும் அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் மனப்பான்மை ஆகியவை கலந்த சூழல் நிலவுகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு கூட்டத்தில் பேசிய இயக்கத் தலைவர் சர்தார் அமன் கான், போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவித்தார்; மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் இயக்கம் தொடரும் என்று உறுதியளித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு வீதிகளில் உள்ள மக்கள் ஆயுதங்களை ஏந்திச் செல்லவில்லை; மாறாக, மலிவு விலை உணவு, மலிவு விலை மின்சாரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான கோரிக்கைகளை மட்டுமே முன்வைக்கின்றனர். இருப்பினும், அவர்களுக்குக் கிடைத்த பதில் துப்பாக்கிக் குண்டுகளாகவே இருந்தது. இறுதிச் சடங்குகள் நடைபெறும்போதும், மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பும்போதும், தங்கள் குரலை ஒலிக்கச் செய்ய முயலும் நிராயுதபாணியான பொதுமக்கள் மீது படைபலம் பிரயோகிக்கப்படும்போது ஏற்படும் மனிதத் துயரங்களுக்கு ராவலகோட் ஒரு நினைவூட்டலாக நிற்கிறது.



