பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை அஷூ ரெட்டி மீது பல கோடி ரூபாய் மோசடி புகார் எழுந்துள்ள சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்வதாக ஆசை காட்டி லண்டனில் பணியாற்றும் ஒரு இளைஞரிடம் இருந்து சுமார் ரூ9.35 கோடி வரை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை ஹைதராபாத் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் கூறப்படுவதாவது, 2018ஆம் ஆண்டு முதல் அஷூ ரெட்டி மற்றும் அந்த இளைஞருக்கு இடையே காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவீட்டாருக்கும் தெரிந்தே இந்த உறவு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
காதலிப்பதாக கூறி, சொகுசு கார்கள், விலையுயர்ந்த நகைகள் மற்றும் பல்வேறு தனிப்பட்ட செலவுகளுக்காக அந்த இளைஞரிடமிருந்து பெரிய தொகை பணம் பெற்றதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் ரூ 9 .35 கோடி வரை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போது திருமணம் குறித்து பேச்சு வந்தபோது, அஷூ ரெட்டி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வருவதாகவும், மேலும் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புவேன் என மிரட்டுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் நடிகை அஷூ ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது ஹைதராபாத் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனைகள் தொடர்பான வங்கி ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
விரைவில் அஷூ ரெட்டியிடம் நேரில் விசாரணை நடத்தப்படலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அஷூ ரெட்டி தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். சமூக வலைதளங்களில் பெரிய ரசிகர் வட்டத்தை கொண்ட இவர், ஏற்கனவே சில சர்ச்சைகளிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



