தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளர் சாய்குமார் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.. நடிகரும் முதல்வருமான விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன்.. இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான் கே. வெங்கட நாராயணா.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வெங்கட் நாராயணா, RRR, சீதாராமம், தேவரா, அனிமல், கல்கி 2898 AD, டாக்ஸி போன்ற படங்களை விநியோகம் செய்துள்ளார்.. பெங்களூருவை சேர்ந்தவர் என்றாலும் கே. வெங்கட நாராயண தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என்று கூறப்படுகிறது.. இவருக்கு தமிழ் மொழியை எழுதவோ அல்லது படிக்கவோ தெரியாது என்றும் கூறப்படுகிறது..
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் கர்நாடகத்தை சேர்ந்தவருக்கு, குறிப்பாக தமிழர் அல்லாத, தமிழ் மொழி கூட தெரியாத ஒருவருக்கு அமைச்சருக்கு இணையான டெல்லியின் சிறப்பு பிரதிநிதி பதவியை முதல்வர் விஜய் வழங்கி இருக்கிறார்.. அவரின் இந்த முடிவுக்கு அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்..
அந்த வகையில் அதிமுக ஐடி, விஜய் தலைமையிலான தமிழக அரசின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளது இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் “ கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள #பொய்க்கால்_குதிரை_அரசு? தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா நடிகர் விஜய் ?
அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்?
புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்!” என்று தெரிவித்துள்ளது.



