திருமணம் முடிந்த பிறகு விவாகரத்து என்பது தற்போது சாதாரணமான ஒன்றாக மாறி வருகிறது. “வேண்டுமென்றால் வைத்துக்கொள், இல்லை என்றால் கொடுத்துவிடு” என்ற அளவிற்கு அது ஒரு எளிதான முடிவாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதே என்று பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிய கருத்து வேறுபாடுகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத நிலை, தம்பதியரை விவாகரத்து என்ற முடிவுக்கு தள்ளுகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை மட்டுமல்லாமல், அவர்களை சார்ந்த குடும்பங்களின் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதே போன்ற ஒரு சம்பவம் தற்போது மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் நேஹா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு தற்போது குழந்தை இன்று உள்ளது. இந்நிலையில், ஆரம்ப காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் நல்ல புரிதலுடன் அன்பாக இருந்துள்ளனர்.
ஆனால், காலப்போக்கில் ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனை அவர்களின் உறவில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கிஷோர், இரவில் தூங்கும்போது அதிகமாக குறட்டை விடும் பழக்கம் கொண்டிருந்ததாகவும், கடந்த சில மாதங்களாக அது அதிகரித்ததால் மனைவி சரியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தபோது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி, விவாகரத்து வழங்க முடிவு செய்துள்ளார். பின்னர் இந்த விவகாரம் குடும்ப ஆலோசனை மையம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கவுன்சிலர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடி முடிவுகளை தவிர்க்கும்படி அறிவுறுத்தியதுடன், சில காலம் தனித்தனியாக வாழ்ந்து தங்கள் உறவை புரிந்துகொள்ளும் வகையில் 3 மாதம் பிரிந்து இருக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
அதன்படி இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில், குழந்தை தாயுடன் இருந்துள்ளார். இந்த இடைவெளிக்குப் பிறகு இருவருக்கும் ஒருவரை ஒருவர் இழந்த உணர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஆலோசனை மையத்தை சந்தித்தபோது, மனைவி தனது விவாகரத்து முடிவை மாற்றிக் கொண்டதாகவும், இனி இணைந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.
Also Read: “குடும்பம் வேண்டாம், கள்ளக்காதலன் போதும்”… கள்ளத்தொடர்பால் அனாதையாக நிற்கும் பிஞ்சு குழந்தைகள்..!



