நாகர்கர்னூல் மாவட்டம் கொல்லாபூர் நகரில் உள்ள அரசு முதுநிலை (பிஜி) கல்லூரியின் முதல்வர், மாணவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பிக்க முயன்ற மாணவர், தற்காப்பிற்காக குற்றம்சாட்டப்பட்ட முதல்வரின் பிறப்புறுப்பைக் கடித்ததாக கூறப்படுகிறது.
குற்றம்சாட்டப்பட்டவர், பாலமூரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கொல்லாபூர் முதுநிலை மையத்தின் முதல்வர் டாக்டர் மார்கே போலோனீஸ். கடந்த ஜூலை 7-ஆம் தேதி இரவு, மாணவரை தனது அறைக்கு வருமாறு அழைத்த அவர், ஆடைகளைக் கழற்றுமாறு கட்டாயப்படுத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர், ஜக்தியல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் 2025-ஆம் ஆண்டு அதே கல்லூரியில் எம்பிஏ படிப்பை முடித்துள்ளார். உயர்கல்விக்காக மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) பெறுவதற்காக சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு வந்திருந்தார்.
மாணவரின் புகாரின்படி, முதல்வர் தன்னை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி, பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாக கூறியுள்ளார். மேலும், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, தற்காப்பிற்காக முதல்வரின் பிறப்புறுப்பைக் கடித்ததாகவும், இதனால் அவர் ரத்தம் சிந்திய நிலையில் வலியால் அலறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த மாணவர்கள், முதல்வர் நிர்வாண நிலையில் இருந்ததை பார்த்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் குளியலறையில் பதுங்கியதுடன், அதன்பிறகு கல்லூரி வளாகத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முதல்வர் ஏற்கனவே ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கும் இதுபோன்ற பாலியல் தொல்லைகளை வழங்கியதாக சக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, மாணவர் அமைப்பினர் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு, முதல்வரை உடனடியாக கைது செய்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் மாணவர் அமைப்பினர் கொல்லாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள முதல்வரை தேடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



