பொள்ளாச்சியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இவர்களின் இந்த உறவு குறித்து அந்தப் பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் கணவர் இனி நீ அவனுடன் பழக கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் அந்தப் பெண் முகேஷுடன் சிறிது நாட்கள் பேசாமல் இருந்துள்ளார்.
ஆனால் முகேஷ், அந்தப் பெண்ணை தன்னிடம் பேசுமாறு தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார். இந்தநாள் மன வேதனை அடைந்த தம்பதியினர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்துள்ளனர். பின்னர் இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன், முகேஷைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது முகேஷ், ரூ.5,000 பணத்தை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சனுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளார். ஆனால் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன் லஞ்சம் வாங்கிய தகவல் வெளியே தெரிந்துள்ளது. இதனால் பதறிப்போன தலைமை காவலர் நாகராஜன், நீ கொடுத்த லஞ்ச பணத்தை திரும்பி வந்து பெற்றுக்கொள் என்று முகேஷிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். ஆனால் முகேஷ் “பணம் எனக்கு வேண்டாம், இந்தப் பிரச்சினையில் இருந்து தீர்வு கிடைத்தால் போதும்” என்று கூறியுள்ளார்.
முகேஷ் பேசிய இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், லஞ்சப் புகாரில் சிக்கிய உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமைக் காவலர் நாகராஜன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், ஜான்சன் மற்றும் நாகராஜ் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: ஃபிரிட்ஜை இப்படி வச்சிருக்கீங்களா? கரண்ட் பில் எகிறிடும்… இப்பவே மாத்துங்க!



